கோவையில் நகைக்கடையில் 4 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்த 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கோவை ராஜவீதி பகுதியில் செயல்பட்டு வந்த சித்தி என்னும் நகைக்கடையில் கடந்த மார்ச் 2ம் தேதியன்று கத்தி முனையில் 4.25 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் மேற்கொண்ட விசாரணையில் அதே நகைக்கடையில் வேலை செய்து வந்த ரியாசுதீன் என்பவர் தனது நண்பர்கள் அசாருதீன் மற்றும் விஜயகுமார் ஆகியோருடன் சேர்ந்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட மூவரையும் போலீசார் தீவிரமாக தேடிவந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை சத்தியமங்கலம் அருகே ஆசனூர் போலீசார் வாகன தனிக்கையின் போது கர்னாடகாவிற்கு பேருந்து மூலம் தப்பிச் செல்ல முயன்ற மேற்குறிப்பிட்ட மூவரும் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து, மூவரையும் கோவைக்கு அழைத்து வந்த போலீசார் அவர்களிடம் இருந்து 4 கிலோ தங்க நகைகளை மீட்டனர். தொடர்ந்து மூவரையும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.