தில்லியில் போராடும் விவசாயிகள் தமிழகத்தில் தி மு க, அ தி மு க தலைவர்களின் வீடுகளின் முன்பாக நிர்வாணப் போராட்டம் நடத்தினால் அந்த போராட்டத்தில் இந்து மக்கள் கட்சியும் பங்கேற்கும் என அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
கோவையில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தேர்தல் ஆணையம் ஆர்.கே.நகர் இடைதேர்தலை ரத்து செய்துள்ளதற்கு கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். பணம் கொடுத்த அ தி மு க-வின் இரு அணிகள், தி மு க ஆகிய கட்சிகளின் வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்துவிட்டு தேர்தலை நடத்த வேண்டும்.
இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டதை கண்டித்து சென்னை தேர்தல் ஆணைய அலுவலகம் முன்பாக வரும் 12-ம் தேதியன்று இந்து மக்கள் கட்சியின் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும்.
மேலும், சித்திரை மாதம் தமிழ் புத்தாண்டு அல்ல என திராவிட இயக்கங்கள் சொல்வது கண்டனத்திற்குறியது. தமிழகத்தில் கள்ளு கடைகளை திறக்க வேண்டும் எனக் கோரி பனைமரத்துக்கு வழிபாடு நடத்திப்போராட்டம் நடத்த உள்ளோம்.
விவசாயிகள் தில்லியில் போராடுவது சரியானதல்ல. தில்லியில் விவசாயிகள் நடத்திய நிர்வாண போராட்டத்தை கலைஞர், ஜெயலலிதா வீட்டு முன் நடத்த வேண்டும். அந்த நிர்வாண போராட்டத்திற்கு இந்து மக்கள் கட்சியும் முழு ஆதரவு அளிப்பதோடு பாதுகாப்பும் வழங்கும்.
தமிழகத்தில் இந்தி எழுத்துக்களை தார் பூசி அழிப்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யவேண்டும். இந்தி எழுத்துக்களை திராவிடர் கழக அமைப்பினர் அழிப்பது தொடர்ந்தால் திராவிட கழகங்களின் கல்வெட்டுக்கள் மீது தார் பூசப்படும்.
தில்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கை நியாயமானது. அப்போராட்டத்தை தமிழகத்தில் நடத்த வேண்டும். பிரதமருடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்காகவே அய்யாகண்ணு தில்லியில் போராட்டம் நடத்துகிறார். மோடியை கேவலப்படுத்த வேண்டும் என்பதற்காகவே போராட்டம் நடத்தப்படுகின்றது" என அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.