திருப்பூர் மாவட்டத்தை அடுத்த சாமளாபுரம் பகுதியில் உள்ள மதுக்கடையை அகற்ற கோரி அப்பகுதி மக்கள் இன்று திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது அவ்வழியே வந்த சூலூர் சட்டமன்ற உறுப்பினரையும் வழிமறித்த அவர்கள், தங்கள் கோரிக்கையை எடுத்து கூறினர். இதை ஏற்றுக்கொண்ட அவர். மக்களிம் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.

இந்த நேரத்தில் அதிகாரிகள் வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, விரைவில் மதுக்கடை அகற்றப்படும் என்று கூறியதாக தெரிகிறது.
இதை நம்பாத அப்பகுதி மக்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். அப்போது அங்கு குவிந்த காவல் துறையினர் பாரபட்சமின்றி பொதுமக்களை விளாசினர். பொதுவாக போராட்ட களத்தில் இருக்கும் பெண்கள் மற்றும் முதியவர்களை எச்சரித்து அனுப்பும் காவல்துறை இன்று கோர தாண்டவம் ஆடியது.

வீட்டில் அடுப்படியில் கிடக்கும் பெண்ணிற்கு வீதியில் என்ன வேலை? என்று நினைத்தாரோ என்னவோ? தடி நடத்திக் கொண்டிருந்த திருப்பூர் மாவட்ட கூடுதல் டி.எஸ்.பி. பாண்டியராஜன் திடீரென பெண்கள் பக்கம் திரும்பினார். பயந்து நடுங்கிய ஒரு பெண்ணின் கண்ணத்தில் 'பொளேர்' என்று ஒரு அடி. தொடர்ந்து, வீட்டுக்கு ஓடும் பெண்களை துரத்தி துரத்தி அடிக்கிறது காவல் துறை.இதை படம் பிடித்த பத்திரிக்கையாளர்களையும் விட்டு வைக்கவில்லை.

காவல் துறையின் இத்தகைய செயலை மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழகம் மட்டுமல்லாது நாடு முழுவதும் கண்டனங்கள் பெருகி வருகிறது.
பெண்கள் மீதும், பத்திரிக்கையாளர்கள் மீதும் தாக்குதல் நடத்திய திருப்பூர் கூடுதல் டி.எஸ்.பி.பாண்டியராஜன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து பத்திரிக்கையாளர் கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.
இன்றைய நிகழ்வை எண்ணிப் பார்க்கையில்பு ரட்சி கண்டு, போராட்டம் கண்டு மீட்டெடுத்த பெண்ணுரிமை இன்று கண்ணம் வீங்கி அமர்ந்ததோ என தோன்றுகிறது.