நெடுஞ்சாலைகளுக்கு அருகில் இருக்கும் மதுபானக்கடைகளை மூட வேண்டும் என்ற உத்தரவையடுத்து கோவையில் 180 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டது.
நகரின் முக்கிய இடங்களில் இருந்த டாஸ்மாக் கடைகள் திடீரென மூடப்பட்டதால் அதிர்ச்சியடைந்த மது பிரியர்கள் ஊர்களுக்குள் இருக்கும் டாஸ்மாக்குகளுக்கு படையெடுக்க தொடங்கியுள்ளனர். அதிகமான வாடிக்கையாளர்கள் வருவதால் தற்போது டாஸ்மாக் முன்பு ‘கியூ’ நிற்க தொடங்கியுள்ளது.

இதில் கோவை ஜீ.வி. ரெசிடென்சி பகுதி அருகே உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனை படு ஜோராக நடைபெற்று வருகிறது. இந்த டாஸ்மாக்கின் அருகே அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமான இடம் உள்ளது. மாலை நேரத்தில் மது அருந்த வரும் குடிமகன்கள், சரக்கை வாங்கி விட்டு அந்த காலி இடத்தை ஆக்கிரமித்து விடுகின்றனர்.
சிங்காநல்லூரில் இருந்து ஹோப்ஸ் செல்லும் சாலையில் தற்போது பாதாள சாக்கடை பணி நடப்பதால், அவினாசி சாலைக்கு செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரும்பாலும் ஜீ.வி. ரெசிடென்சி சாலையையே பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், பொது இடத்தில் மது அருந்தும் குடிமகன்கள் போதையில் பாட்டில்களை சாலை நடுவே போட்டு உடைக்கின்றனர். இதனால் மாலை நேரத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் அந்த சாலையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த டாஸ்மாக்கிற்கு வருபவர்கள் மசக்காளிபாளையம் செல்லும் சாலையின் இருபுறமும் வாகனகளை நிறுத்திவிடுகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
கண்டுகொள்ளாத காவல்துறை?
இந்த டாஸ்மாக் கடைக்கு அதிக அளவில் கூட்டம் வருவதை அறிந்த போலீசார், கடையில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் மறைந்து நிற்கின்றனர். மது போதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு அபராதம் விதித்து அனுப்பிவிடுகின்றனர். ஆனால், பொது இடத்தில் மது அருந்துபவர்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகின்றனர் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.