மாதங்களில் முதன்மையானது சித்திரை, நெடுங்காலம் தொட்டு இந்த மாதத்தின் முதல் நாளை தமிழர்கள் தமிழ் புத்தாண்டாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நன்நாளில், முக்கனிகளான மா, பலா, வாழை மற்றும் ஆபரணங்கள், செல்வங்கள் முதலானவற்றை தங்கள் இஷ்ட தெய்வத்தின் முன் வைத்து, காலை எழுந்தவுடன் அவற்றில் விழித்து புது வருடத்தை பக்தியுடனும், ரசனையுடனும் தொடங்குகின்றனர் தமிழ் மக்கள்.

தமிழர்கள் சித்திரை முதல் நாளை புத்தாண்டாக ஏற்றுக்கொண்டதற்கு பின் அறிவியல் ரீதியான காரணங்கள் உள்ளது. சூரியனை மையமாக வைத்து பூமி சூரியனைச் சுற்றும் நீள்வட்டப் பாதையினை தமிழர்கள் 12 பாகங்களாகப் பிரித்தார்கள்.
அவை வான வீதியை மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் என 12 பாகங்களாகும். இவையே ராசிகள் என அழைக்கப்படுகின்றன. சூரியன் மேஷத்திற்குள் நுழையும் நிகழ்வு சித்திரையில் நிகழ்கிறது.
ஆகவே இந்த ஆரம்பத்தையே புத்தாண்டின் தொடக்க நாளாகக் கொண்டு புது வருடத்தை அறிவியல் ரீதியாக தமிழர்கள் ஆரம்பித்தார்கள்.
அது மட்டுமின்றி வான வீதியில் உள்ள 27 நட்சத்திரங்களை சமமாகப் பங்கிட்டு இந்த 12 ராசிகளுள் அடக்கினார்கள். அசுவதி தொடங்கி ரேவதி முடிய உள்ள 27 நட்சத்திரங்கள் இந்த 12 ராசிகளில் உள்ளன. அசுவதி நட்சத்திரம் மேஷ ராசியில் தொடங்குவதால் தமிழ் புத்தாண்டின் ஆரம்பம் சித்திரையில் ஆரம்பிப்பது உறுதிபடுகிறது. இவ்வாறாக அறிவியல் ரீதியாக கொண்டாடப்படும் தினம் தான் தமிழ் புத்தாண்டு.

நாளை கொண்டாடப்படவுள்ள தமிழர் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு கோவை பூமார்க்கெட் மற்றும் பழக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. மாலை நேரத்தில் கூட்டம் இன்னும் அதிகரிக்கலாம் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளன.

வீட்டு வாசலில் பூக்கோலம் இட்டு, முக்கனிகளின் முகத்தில் விழித்து, புத்தாடை அணிந்து, சக மக்களுக்கும் வாழ்த்துக்கள் கூறி மகிழ்வது தான் தமிழ் புத்தாண்டு.
மக்கள் அனைவருக்கும் சிம்ப்ளிசிட்டி-யின் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.