திருப்பூர் மாவட்டம், சாமளாபுரம் குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கடந்த செவ்வாயன்று அப்பகுதி பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பலர் இணைந்து அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனிடையே சம்பவயிடத்திற்கு வந்த கூடுதல் டிஎஸ்பி பாண்டியராஜன் தலைமையிலான காவல்துறையினர் பெண்கள் என்றும் பாராமல் கண்மூடித்தனமாக தாக்கினர்.
இதில், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண்கள் அமைதியான முறையில் கலைந்து சென்ற நிலையில் ஒரு பெண்ணை கூடுதல் டிஎஸ்பி பாண்டியராஜன் கடுமையாக தாக்கிய சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, கோவை காந்திபுரம் பகுதியில் இன்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பினர் கூறுகையில், குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சாமளாபுரம் பகுதி பெண்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், காவல்துறையினர் பெண்கள் என்றும் கூட பார்க்காமல் கடுமையாக தாக்கினர். பல ஆண்கள் மீது கொலை வெறித்தாக்குதல் நடத்தப்பட்டது.
தொடர்ந்து, அடுத்த அதிகாலை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தோரை அத்துமீறி கைது செய்தனர். அதில் 7 பேரை விசாரணையின் அடிப்படையில் காவலில் வைத்துள்ளனர். 20 பேரை பல்லடம் ரைஸ் மில் பகுதியில் சட்டவிரோதமாக பிணைக் கைதிகளாக அடைத்து வைத்துள்ளனர்.
இதுகுறித்து எந்த அதிகாரிகளும் கண்டுகொள்ளவில்லை. ஏனெனில், டாஸ்மாக் மூலம் அரசியல் கட்சியினர், அதிகாரிகளுக்கு வருமானம் கிடைத்து வருகிறது. அவினாசி தொகுதி எம்எல்ஏ-வே காவல்துறையை ஏவி மக்கள் மீது இந்த கொடூர தாக்குதல் நடத்தியுள்ளார் என தெரியவருகிறது.
தாமிழகம் முழுவதும் 3 ஆயிரம் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்ட நிலையில் அந்த கடைகளை குடியிருப்பு பகுதியில் அமைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆங்காங்கே மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மக்கள் அதிகாரம் 2015 முதலே இதுகுறித்தான போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. காவல் துறை மக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் முக்கியத்துவம் அளிப்பது இல்லை. அரசியல் கட்சிகளும், காவல்துறையினரும் இணைந்தே கூட்டு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து, இறுதி டாஸ்மாக் கடை இருக்கும் வரை மக்கள் அதிகாரம் போராடும்" என தெரிவித்தனர்.
இதனைத்தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.