கோவையில் இருந்து 70 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது பரளிக்காடு சுற்றுலாத்தலம். காரமடை வணச்சரகத்திற்கு உட்பட்ட ஒரு மலைக்கிராமம் தான் இந்த பரளிக்காடு. முழுக்க முழுக்க மழை வாழ் மக்களின் வாழ்வாதாரத்திற்காக உருவாக்கப்பட்ட பரளிக்காட்டில் சுமார் 100 குடும்பங்கள் வசிக்கின்றன.

பில்லூர் அணைக்கு செல்லும் நீர்பாதையில் இருந்து 2 கி.மீ தூரத்திற்கு பரிசல் சவாரி, மலையேற்றம் மற்றும் அத்திக்கடவு அருவி குளியல் முதலானவற்றை மலைவாழ் மக்களின் உதவியோடு சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்குகிறது காரமடை வனச்சரகம்.

இதற்காக சுற்றுலா பயணிகளிடம் ஒரு குறிப்பிட்ட தொகை பெற்று அந்த தொகை முழுவதும் அம்மலை வாழ் மக்களின் வாழ்வாதாரத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர் அங்குள்ள வன அதிகாரிகள். வாரத்தின் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் அனுமதிக்கப்பட்டு வந்த பரளிக்காடு சுற்றுலாத்தலம் கோடை விடுமுறையை தொடர்ந்து, இன்று தொடங்கி வரும் மே 31-ம் தேதி வரை தினமும் அனுமதிக்கப்படுகிறது.

பரளிக்காடு குறித்து காரமடை வனச்சரக வனவர் சுரேஷ் கூறுகையில், ‘பொருளாதார ரீதியான பிரச்சனைகள் மலைவாழ் மக்களுக்கு ஏற்படும் போது அவர்கள் எந்த ஒரு தவறான பாதையிலும் சென்றுவிட்டக்கூடாது என்ற நோக்கத்தில் பரளிக்காடு சுற்றுலாத்தலம் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு வரும் பயணிகளிடம் வசூலிக்கப்படும் தொகை முழுவதும் மலைவாழ் மக்களின் கல்வி, வாழ்வாதாரம் போன்றவற்றிற்காக பயன்படுத்தப்படுகிறது.

இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு மலைவாழ் மக்களே உணவு அளிக்கின்றனர். அதோடு, பரிசல் சவாரி மற்றும் மலையேற்றம் போன்ற கேளிக்கைகளும் உள்ளன. பயணிகள் தங்குவதற்கு விடுதியும் தற்போது கட்டப்பட்டுள்ளது" என்றார்.

இத்தகைய சிறப்பம்சங்கள் கொண்ட பரளிக்காட்டிற்கு செல்ல தினமும் அனுமதி வழங்கப்படுவதை தொடர்ந்து தற்போது அங்கு சிறு சிறு குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதோடு, வன விலங்குகளை பார்வையிட மகிழ மரங்களின் மீது பரன்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இங்கு சுற்றுலா செல்ல வனத்துறையிடம் முன் அனுமதி பெற வேண்டும். தமிழ்நாடு வனத்துறையின் இணையதள பக்கத்தின் மூலம் இந்த முன் அனுமதியை பெற முடியும். விடுமுறையை முழுமையான இயற்கையோடு செலவிட நினைப்பவர்கள் ஒரு நாள் பரளிக்காடு சுற்றுலா செல்லலாம்..!
