கோவை, கருமத்தம்பட்டியில் குடியிருப்பு பகுதியில் அமையவுள்ள டாஸ்மாக் கடையினை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபடும் மக்களை ஒடுக்கும் காவல்துறையினரைக் கண்டித்தும், இதுகுறித்து விசாரிக்கச் சென்ற வழக்கறிஞரை தரக்குறைவாக பேசிய காளப்பட்டி காவல் ஆய்வாளர் சேகரைக் கண்டித்தும் ரேஸ்கோர்ஸ் பகுதியில் அமைந்துள்ள சி.சுப்ரமணியம் சிலையின் அருகே அமர்ந்து வழக்கறிஞர் பிரபாகர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர் பிரபாகர் கூறுகையில், கோவை மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை, மாநில சாலைகள் உள்ளிட்டு பல சாலைகளில் அமைந்திருந்த டாஸ்மாக் மதுக்கடைகள் நீதிமன்ற தீர்ப்பை அடுத்து மூடப்பட்டன. தற்போது அந்தக் கடைகளை குடியிருப்பு பகுதிகளில் அமைக்க டாஸ்மாக் நிர்வாகம் மற்றும் அரசியல் கட்சியினர் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்ஒரு பகுதியாக கோவை கருமத்தம்பட்டியில் குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனை ஒடுக்கும் விதமாக காளப்பட்டி காவல்துறையினர் மக்கள் மீது பொய் வழக்குகள் பதிவது, அவமானப்படுத்துவது என சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து விசாரிக்க நான் மற்றும் காளப்பட்டி மக்கள் சிலர் காவல்நிலையம் சென்ற நிலையில், அங்கிருந்த காவல் ஆய்வாளர் சேகர் என்னுடன் வந்த சிலரை விசாரணைக் கைதிகலாக அங்கேயே அடைத்து வைத்து விட்டார். மேலும், என்னை "எதற்காக காவல் நிலையம் வருகிறாய்" என ஒருமையிலும், தரக்குறைவாகவும் திட்டி வெளியேற்றினார்.
ஒரு பிரச்சனை வரும் காலங்களில் மக்கள் காவல்நிலையத்தினை நாடாமல் எங்கே செல்வது?. ஊள்ளூர் அரசியல் கட்சியினருடன் இணைந்து கொண்டே காவல் ஆய்வாளர் இவ்வாறாக செயல்படுகிறார்.
அவர் மீது உரிய விசாரணை மேற்கொண்டு சட்ட ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், அவரை பணிநீக்கம் செய்ய வேண்டும். பொதுமக்களின் குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை அமைப்பதை தடுக்க வேண்டும். போராடும் மக்கள் மீது அடக்குமுறையை கையாளக்கூடாது. இதனை வலியுறுத்தியே காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுளேன்" என தெரிவித்தார்.