கோவை சின்னியம்பாளையம் பகுதியில் மதுக்கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் கறுப்புகொடி கட்டி இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோவையில் டாஸ்மாக கடைகள் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ச்சியாக பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதனொரு பகுதியாக கோவையை அடுத்த சின்னியம்பாளையம் பகுதியில் கோவை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இருந்து அகற்றப்பட்ட டாஸ்மாக் கடையை விவசாய நிலத்தில் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக அங்கு கட்டிடம் கட்டும் பணிகளும் நிறைவடைந்துள்ளது.
இதற்கு அப்பகுதியிலுள்ள பொதுமக்கள் எதிர்ப்புதெரிவித்து வந்த நிலையிலும் அதற்கான பணிகளை அதிகாரிகள் கைவிடவில்லை. இதனால் அதிர்ப்தி அடைந்த கிராம மக்கள் வீடுகள் மற்றும் கடைகள், தொழிற்சாலைகளில் கறுப்பு கொடிகளை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் இப்பகுதியில் விவசாய நிலத்தில் டாஸ்மாக் கடை அமைத்தால் விவசாயம் பாதிக்கப்படும் எனவும், ஏற்கனவே தெரு விளக்குகள் இல்லாததால் இந்த பகுதியை கடக்க பொதுமக்கள் சிரமப்பட்டு வரும் நிலையில் மதுக்கடை அமைத்தால் இந்த பகுதியை கடக்கும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர் உட்பட அனைவருக்கும் இடையூறாக அமையும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், தங்களுடைய எதிர்ப்பை மீறி டாஸ்மாக் கடை அமைக்கும் பட்சத்தில் தொடர் போராட்டங்களில் ஈடுபடபோவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.