அதிமுக துணை பொதுச் செயலாளர் தினகரனை கட்சியில் இருந்து நீக்கிவிட்டு, இரு அணிகளும் மீண்டும் ஒன்று சேர முயற்சி மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுவதை ஓ.பன்னீர்செல்வம் எச்சரிக்கையாக கையாள வேண்டும் என அதிமுக முன்னாள் நட்சத்திர பேச்சாளரும், நடிகருமான ஆனந்தராஜ் வலியுறுத்தியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் நடிகர் ஆனந்தராஜ் செய்தியாள்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ஒரே ஒரு தொகுதிக்கு 100 கோடி செலவு செய்துள்ளனர். தினகரன் தவிர வேறு யாராவது நின்று இருந்தால் இந்த அளவு செலவு செய்திருப்பார்களா ?.
இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்கப்பட்டு இருப்பது டி.டி.வி.தினகரன் அளித்துள்ள பேட்டி மூலமே வெளிப்படுகிறது. கொங்குமண்டலம் அதிமுக-விற்கு பெரிய அளவில் ஆதரவு அளித்திருக்கும் நிலையில் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் மக்கள் வருத்தத்தினை போக்க நல்ல முடிவினை எடுக்க வேண்டும். அதிமுக ஒரு குடும்ப கட்சியாக இருக்கக் கூடாது.
எந்த அணியிலும் இதுவரை தான் இல்லை. நடிகனாகவும், அம்மாவின் பிள்ளையாகவும் மட்டுமே உள்ளேன். தினகரனை கட்சியில் இருந்து நீக்கிவிட்டு இரு அணிகளும் மீண்டும் ஒன்று சேர முயற்சி மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுவதை ஓ.பன்னீர்செல்வம் எச்சரிக்கையாக கையாள வேண்டும்.
இந்த ஆட்சியை மக்களிடம் கொடுத்து விட வேண்டும். ஆட்சியை கலைத்துவிட்டு யாரை வேண்டுமானாலும் மக்கள் தேர்வு செய்யட்டும். மாற்றம் வருவதற்கான சூழல்கள் தெரிகிறது.
இயக்குனர் கௌதமன் சென்னை கத்திபாரா பாலத்தில் போராட்டம் நடத்தியது கண்டிக்கத்தக்கது. இது போன்ற போராட்டங்கள் மக்களுக்கு இடையூறாகவே இருக்கும்.
தமிழகத்தில் ஆட்சி நடக்கின்றதா என்பதே யாருக்கும் தெரியவில்லை. செயல்படாத முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். அதிமுக அம்மா அணியில் நட்சத்திர பேச்சாளர்கள் இருக்க விரும்பவில்லை. அதனாலேயே நடிகை விஜயசாந்தி, நடிகர் சரத்குமார் போன்றவர்கள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக விலைக்கு வாங்கப்பட்டுள்ளனர்" என ஆனந்தராஜ் பேசினார்.