பாரதியார் பல்கலைக் கழகம் 1982 ஆம் ஆண்டு ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தொடங்கப்பட்டது. தற்பொழுது பாரதியார் பல்கலைக் கழகத்தில் 39 துறைகளும் 2543 மாணவர்கள் முதுகலை பட்டப்படிப்பு மற்றும் ஆராய்ச்சியில் சேர்ந்து பயின்று வருகின்றனர்.

இப்பல்கலைக் கழகத்தில் 9 விடுதிகள் அமைக்கப்பட்டு அதில் 1776 மாணவர்கள் விடுதியில் தங்கி பயின்று வருகின்றனர். தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் 23 மாணவர்களும் மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள் 391 மாணவர்களும் இங்கு தங்கி பயன்பெற்று வருகின்றனர்.
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை உயர்கல்வியின் தரத்தை உயர்த்தும் நோக்கில் ரூசா (RUSA) என்ற திட்டத்தை கடந்த 2013 ஆம் ஆண்டு தொடங்கியது. இத்திட்டத்தின் மூலம் தகுதியுடைய உயர்கல்வி நிறுவனங்களுக்குத் தேவையான நிதி ஒதுக்கீட்டினை மாநில அரசுகள் மூலமாக ஒதுக்கீடு செய்து, உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்தி வருகிறது.

ரூசா திட்டத்தின் மூலம் பாரதியார் பல்கலைக் கழகம் "உட்கட்டமைப்பு" என்கிற தலைப்பில் நிதி ஒதுக்கீடு செய்வதற்கான கருத்துருவை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு சமர்பித்தது. இதைத் தொடர்ந்து, கடந்த 26.05.2014 அன்று மனிதவள மேம்பாட்டுத் துறை, பாரதியார் பல்கலைக் கழகத்திற்கு ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
முதல் கட்டமாக ரூ.2.5 கோடியை கட்டுமான நிதியாக வழங்கியுள்ளது. அந்த நிதி மற்றும் பாரதியார் பல்கலைக் கழகத்தின் நிதி என ரூ.5.50 கோடி மதிப்பிலான பெண்கள் விடுதிக் கட்டிடம் வாசுகி மகளிர் விடுதி என்ற பெயரில் கட்டப்பட்டுள்ளது.

இந்த மகளிர் விடுதி 25 ஆயிரம் சதுரடி அளவில் கட்டப்பட்டுள்ளது. இதில், மாணவிகளுக்கு 54 அறைகளும் மற்றும் மாணவிகளின் சேவைக்காக இதர 10 அறைகளும் கட்டப்பட்டுள்ளன.
இந்த விடுதியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, இணையதள வசதி, கண்காணிப்பு கேமரா கருவிகள், விளையாட்டுத் திடல் மற்றும் இதர வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 160 மாணவியர்கள் பயன்பெறுவார்கள் என பாரதியார் பல்கலைக் கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.