கின்னஸ் சாதனை முயற்சியாக கோவை மணிகாரம்பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளி மாணவ மாணவியர்கள் இணைந்து முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் உருவ படத்தை 2 லட்சத்தி 35 ஆயிரம் காகித கோப்பைகளை பயன்படுத்தி வடிவமைத்துள்ளனர்.

கோவை கணபதி அடுத்த மணிகாரம்பாளையம் பகுதியில் கேம்போர்டு இண்டர்நேஷனல் என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி மாணவ, மாணவியர்கள் கின்னஸ் சாதனை படைக்கும் முயற்சியாக முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களின் உருவப்படத்தை வடிவமைக்க திட்டமிட்டுள்ளனர்.

அதன் படி, இன்று காலை பள்ளி மைதானத்தில் 6ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை பயிலும் 167 மாணவ மாணவியர் ஒன்றிணைந்து காகித கோப்பைகளை பயன்படுத்தி அப்துல்கலாம் அவர்களின் உருவ படத்தை வடிவமைத்தனர்.

10 ஆயிரத்து 560 சதுர அடியில், கருப்பு, வெள்ளை, நீலம் உள்ளிட்ட 5 நிறங்களினால் ஆன சுமார் 2 லட்சத்தில் 35 ஆயிரம் காகித கோப்பைகள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. காலை 6.30 மணியவில் துவங்கிய பணி மாணவ, மாணவியர்களின் கூட்டு முயற்சியால் 3 மணி நேரம் 40 நிமிடங்களில் முடிவடைந்தது..

முன்னதாக, கடந்த 2016 ஆம் ஆண்டு 1 லட்சத்தில் 40 ஆயிரம் காகித கோப்பைகளை பயன்படுத்தி லக்னோவில் நடைபெற்ற சாதனையை முறியடிக்கும் வகையில், பள்ளி மாணவ மாணவியர்கள் இம்முயற்சியை மேற்கொண்டுள்ளதாகவும், இதன் வீடியோ பதிவுகளை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறுவதற்கான ஆதாரமாக அனுப்பப்பட உள்ளதாக பள்ளி நிர்வாகம் சார்பாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வினைத் தொடர்ந்து, பள்ளியின் தாளாளர் பூங்கோதை அருள் ரமேஷ் மாணவ, மாணவியரை வாழ்த்தி உரையாற்றினார். பள்ளியின் தலைவர் அருள் ரமேஷ், முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் இந்த நிகழ்வை பார்வையிட்டு மாணவர்களைப் பாராட்டி மகிழ்வித்தனர்.