கோவை கவுண்டம்பாளையத்தில் செயல்பட்டு வரும் மார்ட்டின் ஹோமியோபதி மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 300 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் கல்லூரி நிர்வாகம் மாணவிகளை தரக்குறைவாக பேசுவதாகவும், மாணவர்களை மோசமாக நடத்துவதாகவும் கூறி, மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டது.
இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், செய்தி ஊடகங்களை சந்திக்கக்கூடாது எனவும், கல்லூரி முன்பாக போராட்டத்தில் ஈடுபடக்கூடாது எனவும் கல்லூரி நிர்வாகத்தினர் மிரட்டல் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதனை மீறி கல்லூரி நுழைவுவாயில் கதவை திறந்து, வாயில் முன்பாக போராட்டம் நடத்த வந்த மாணவர்களை கல்லூரி நிர்வாகத்தினர் தடுத்து நிறுத்தியதால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையடுத்து கல்லூரியை விட்டு வெளியேற மறுத்து மாணவர்கள் வாயில் முன்பாக அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் போது மாணவர்களை தரக்குறைவாக பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும், அதுவரை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மாணவர்கள் தெரிவித்தனர்.