கோவை மாவட்டத்தில் நிலவி வரும் வறட்சி மற்றும் குடிநீர் பிரச்சனைகள் தொடர்பாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வறட்சி, குடிநீர் பிரச்சனை, நலத்திட்ட பணிகள் தொடர்பாக நகராட்சி நிர்வாகம் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்ட செயலாக்க துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் மற்றும் சட்ட மன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் ஆறுக்குட்டி, சின்னராஜ், அருண்குமார் ஆகிய சட்ட மன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறுகையில், தமிழகம் முழுவதும் குடிநீர் திட்டங்களுக்காக 1118.77 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு பெரும்பாலான பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.
கோவையில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க போர்வெல் போட வாய்ப்பிருக்கும் இடங்களில் உடனடியாக போர்வெல் போடப்பட உத்திரவிடப்பட்டுள்ளது. மேலும் வறட்சி நிவாரணம் விவசாயிகளுக்கு முழுமையாக வழங்கப்பட்டு உள்ளது. விடுபட்டுள்ள பகுதிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க உத்திரவிடப்பட்டுள்ளது.
கொங்கு பகுதி மக்களின் 70 ஆண்டுகால கோரிக்கையான அவினாசி- அத்திக்கடவு திட்டத்திற்கு 250 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளதற்கும், நீரா பானத்தை கொண்டு வர நடவடிக்கை எடுத்து முயற்சி மேற்கொண்டு இருப்பதற்கும் தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
142 வருடங்களுக்குப் பின்னால் கடும் வறட்சி ஏற்பட்டுள்ள நிலையில், குடிநீர் பிரச்சனைக்காக மறியல் போராட்டம் நடத்துவது சரியானதல்ல. குடிநீர் பிரச்சனையை தூண்டிவிட்டு அரசியல் செய்வதும் சரியானதல்ல" என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
இதனைத்தொடந்து கூட்ட அரங்கில் இருந்து வெளியே வந்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம், அதிமுக இரு அணிகள் இணைப்பு தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, "பத்திரிகைகளில் அமைச்சர்கள் பேட்டி அளிப்பதால் குழப்பம் ஏற்படுகின்றது. அனுமதி இல்லாமல் பேட்டி கொடுக்க வேண்டாம் என முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.
மேலும், இரு தரப்பிலும் குழுக்கள் அமைக்கப்பட்டு இணைப்பு பணிகள் ஆரோக்கியமாக நடைபெற்று வருகின்றது. முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுக்க வேண்டும் என்பதே தங்களது குறிக்கோள். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தில்லியில் இருந்து வந்தவுடன் இணைப்பு தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். இரு அணிகளும் ஒற்றுமையாக இருந்து செயல்பட உள்ளது என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.