தமிழகத்தின் தற்போதைய முக்கிய பிரச்சனைகளுள் ஒன்றாகவும், அனைத்துத் தரப்பினரையும் அச்சுறுத்தும் விசயமாகவும் இருக்கும் பிரச்சனை என்றால் அது வறட்சியே. போதிய மழையின்மை, நிலத்தடி நீர் குறைவு, வெயிலின் தாக்கம் அதிகரிப்பு என வறட்சியின் கோரதாண்டவத்தில் மக்கள் சிக்கியுள்ளனர். மக்கள் மட்டுமின்றி மக்களின் தவறுதலினால் ஒட்டுமொத்த இயற்கையுமே சிக்கித் தவிர்த்து வருகிறது.

மழை வேண்டும், நீர் வேண்டும், ஆரோக்கியமான சுற்றுச்சூழல் வேண்டும் என கேட்கின்ற நாம், அதற்கான எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்வதில்லை. இவ்வாறாக இன்று நாம் செய்யும் ஒரு சில தவறுதல்கள் நாளை அடுத்த தலைமுறையினரையே அதிகப்படியாக பாதிக்கும் என உணர வேண்டும்.
இதுகுறித்தான விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில், கோவை சிறுதுளி அமைப்பின் சார்பில் கடந்த 11 வருடம் முன்பு துவங்கப்பட்டதே "நட்சர் நேச்சர் கேம்ப்". இந்த இயற்கை குறித்தான முகாம் இவ்வாண்டு கடந்த ஏப்ரல் 14ம் தேதியன்று துவங்கி இன்றுடன் முடிவடைந்தது.
கோடை விடுமுறையை பள்ளிக் குழந்தைகள் பயனுள்ளதாக கழிக்கும் வகையில் நூறு குழந்தைகளை இருபது பள்ளிகளில் இருந்து தேர்வு செய்த சிறுதுளி அமைப்பினர், அவர்களுக்கு ஆறுநாட்கள் நொய்யல் ஆற்றங்கரையில் உள்ள குளங்கள், இயற்கை வேளாண் பண்ணை, தொழிற்சாலைகளில் கழிவுநீர் மேலாண்மை, கோவையின் பாரம்பரிய இடங்கள் என்று பலவற்றை சிறப்பு வல்லுநர்கள், இயற்கை ஆர்வலர்கள் மூலம் கற்றுத்தந்தனர்.

இன்று, வெள்ளியங்கிரி மலையடிவாரமான செம்மேடு அருகே உக்குளம் கிராமத்தில் நீர்நிலை தூர்வாரும் பணி நடைபெற்றது. அங்கு அழைத்துச் செல்லப்பட்ட குழந்தைகளுக்கு தூர்வாரும் பணிகள் குறித்தான விளக்கங்களும், அவசியமும் குறித்து மயில்சாமி என்பவர் எடுத்துரைத்தார்.
இதுகுறித்து, சிறுதுளி அமைப்பின் நிறுவனர் வனிதா மோகன் கூறுகையில், "இந்த இயற்கை முகாமிற்கு 120 பள்ளி மாணவர்களும், 25 ஆசிரியர்களும் தேர்வு செய்யப்பட்டு பங்கேற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் வெவ்வேறு பள்ளிகளைச் சார்ந்தவர்கள்.

இங்கே குழந்தைகளுக்கு மரங்கள், பறவைகள், குளம், நீர்நிலை பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து ஏப்ரல் 14ம் தேதி முதல் இன்று வரை என 9 நாட்கள் சிறப்பு வகுப்புகளும், கள பயிற்சிகளும், விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. மாணவர்கள் கற்றுக்கொள்வதை விட கேள்விகளையே அதிகமாக கேட்டனர். இதனால் அவர்களுக்கு பலவற்றை கற்றுக்கொடுக்க ஏதுவாக இருந்தது.
சிறுதுளி அமைப்பால் நடத்தப்படும் இதுபோன்ற சிறப்பு முகாமில் பயின்றவர்கள் தற்போது பல தன்னார்வ அமைப்புகளில் செயலாற்றி வருகின்றனர். இயற்கையான முறையில் விவசாயம், காய்கறி உள்ளிட்ட இயற்கை கழிவுகளில் இருந்து எரிவாயு எடுத்தல் போன்ற பணிகளிலும் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மாணவ, மாணவியர்கள் இயற்கை சுற்றுலா செல்லும் போது பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்தல், இயற்கைக்கு சேதம் விளைவிக்காமல் இருத்தல் உள்ளிட்டவை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாக உள்ளது. இதுகுறித்து விழிப்புணர்வினை முழுமையாக ஏற்படுத்த பள்ளியிலேயே இயற்கை குறித்தான தனியே ஒரு பாடப்பிரிவினை அமைக்க வேண்டும்.
கோவையில் இந்த ஆண்டு கடுமையாக நீர்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதற்கான காரணம் காடு மற்றும் விவசாயத்தினை அழித்ததே ஆகும். பசுமையான மரங்கள், விவசாய நிலங்கள் இல்லாமையால் ஈரப்பதம், நிலத்தடியில் உள்ள நீர் உள்ளிட்டவை எழிதில் வறண்டுவிடுகின்றன. பெரும்பாலான விவசாய நிலங்கள் தற்போது கட்டடிங்களாக காட்சியளிக்கின்றன. இயற்கையான சுற்றுச் சூழலே கோவையில் இல்லை.
நீர்நிலைகள் என்பது நம் இதயம் போன்றது. இதயத்திற்கு வரும் இரத்தக் குழாய்களில் ஒன்றில் அடைப்பு ஏற்பட்டாலும் உயிருக்கே ஆபத்து ஏற்படுகிறது. அதுபோன்று தான் நீர்நிலைகளுக்கு வரும் வழித்தடங்களில் ஆக்கிரமிப்பு, பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டுதல் உள்ளிட்டவையால் அடைப்பு ஏற்பட்டாலும் மாபெரும் ஆபத்து ஏற்படும். எனவே, நீர்நிலைகளை பாதுகாக்க அனைத்துத் தரப்பினரும் முன்வர வேண்டும்" என்றார்.
இதுகுறித்து சிறுதுளி இயற்கை முகாமில் பங்கேற்ற சூலூர் ஏர்போர்ஸ் பள்ளி ஆசிரியை சுஜினி கூறுகையில், மாணவர்களுக்கு பாடத்திட்டத்தில் உள்ள கல்வியை மட்டுமே கற்றுக்கொடுப்பதால் அவர்களுக்கு சூற்றுச்சூழல் குறித்தான அடிப்படை அறிவு கூட இல்லாமல் போகிறது. பள்ளி மாணவர்களுக்கு இயற்கை குறித்தான விழிப்புணர்வினை ஏற்படுத்துவதால் மட்டுமே அதனை முழுமையாக பாதுகாக்க முடியும். தற்போது சிறுதுளி மேற்கொண்டுள்ள இயற்கை குறித்தான முகாம் மாணவர்களுக்கு சிறந்த கற்றல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவினை ஏற்படுத்தியுள்ளது" என்றார்.