அ.தி.மு.க இரு அணிகள் தரப்பில் குழுக்கள் அமைக்கப்பட்டு இருப்பதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் இருந்து திரும்பியவுடன் கட்சி இணைப்பு தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கை தொடரும் என நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்க துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்தார்.
இதனை தொடந்து, கூட்ட அரங்கில் இருந்து வெளியே வந்த அமைச்சர் எஸ்.பி வேலுமணியிடம், அ.தி.மு.க இரு அணிகள் இணைப்பு தொடர்பாக கேள்வி எழுப்பபட்டது. அப்போது பேசிய அமைச்சர் எஸ்.பி வேலுமணி, பத்திரிகைகளில் அமைச்சர்கள் பேட்டி அளிப்பதால் குழப்பம் ஏற்படுகின்றது என்பதால், அனுமதி இல்லாமல் பேட்டி கொடுக்க வேண்டாம் என முதல்வர் அறிவுறுத்தி இருப்பதாகவும் வேலுமணி தெரிவித்தார்.
மேலும், இரு தரப்பிலும் குழுக்கள் அமைக்கப்பட்டு இணைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது எனவும், முடக்கப்பட்ட இரட்டை இலை சின்னத்தை மீட்டெடுக்க வேண்டும் என்பதே தங்களது குறிக்கோள் எனவும் தெரிவித்தார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லியில் இருந்து வந்தவுடன் இரு அணிகள் தரப்பில் கட்சி இணைப்பு தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், இரு அணிகளும் ஒற்றுமையாக இருந்து செயல்பட இருப்பதாகவும் சின்னத்தை மீட்பதற்கான நடவடிக்கை தொடரும் எனவும் அவர் தெரிவித்தார்.