கோவையில் உள்ள இளம் பத்திரிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில், பயிற்சிப்பட்டறை ஒவ்வொரு ஞாயிற்று கிழமை அன்று நடைபெற்று வருகிறது. இந்த பயிற்சிப்பட்டறையில் மூத்த பத்திரிக்கையாளர்கள் மற்றும் துறை சார்ந்த நிபுணர்கள் இளம் பத்திரிக்கையாளர்களுக்கு பயிற்சிகளை வழங்கி வருகின்றனர். அதன்படி, ஐந்தாவது பயிற்சிப்பட்டறை நிகழ்வு இன்று காலை கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் தொடங்கியது. இதில் சிறப்பு விருந்தினராக சன் தொலைக்காட்சியின் மூத்த செய்தியாளர் மார்டின் ராஜா கலந்து கொண்டார்.

அப்போது அவர் 'காட்சி ஊடகவியல் செய்தி சேகரிப்பு' என்ற தலைப்பில் இளம் பத்திரிக்கையாளர்களிடையே பேசினார்.அவர் பேசியதாவது :-
ஒவ்வொரு செய்தியாளரும் கொடுக்கும் செய்திகள் மக்களுக்கு பயனுள்ள வகையில் இருக்க வேண்டும். மாறாக, ஒரு செய்தியால் மக்களுக்கு அல்லது ஒரு சமூகத்திற்கு பிரச்சனை ஏற்படும் என்றால், அந்த செய்தியை தவிர்ப்பது நல்லது. முடிந்த வரையில் கடினமான வார்த்தைகளையோ அல்லது மிகைப்படுத்தும் விதமான வார்த்தைகளையோ பயன்படுத்த வேண்டாம்.
இன்றைய சூழலில் பரபரப்பை ஏற்படுத்துவது தாம் செய்தி என்றாகிவிட்டது. உதாரணமாக கேரளா-தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களுக்கு இடையே குடிநீர் கொடுத்து பெறுவது என்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளது. ஆனால், தண்ணீர் கிடைக்காத நேரத்தில் தமிழக ஊடகங்கள் கேரளாவிற்கு எதிராகவும், அங்கு உள்ளவர்கள் தமிழகத்திற்கு எதிராகவும் செய்திகளை பதிவு செய்வதை கைவிட வேண்டும்.
அதில் உள்ள பிரச்சனைகளை தீர ஆய்வு செய்து பின்னர் செய்தி வெளியிடுவது தான் பத்திரிக்கை தர்மம்.
மதம், இனம், மொழி மற்றும் மாநில எல்லைகளை கடந்து பத்திரிக்கையாளர்கள் அனைவரும் நடுநிலையோடு செயல்படுதல் அவசியமாகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, இளம் பத்திரிக்கையாளர்களுக்கு இடையே தொகுப்பாளர்-செய்தியாளர்கள், செய்தி வெளியிடும் முறை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.