திருப்பூரில் 22-வது நிட் ஷோ ஜவுளி தொழில்நுட்ப இயந்திர கண்காட்சி துவங்கியது. 400-க்கும் மேற்பட்ட அரங்குகளுடன், பல்வேறு நாடுகளின் ஜவுளி தொழில்நுட்ப நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. மூன்று நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சி பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.
திருப்பூர்: திருப்பூர் காங்கயம் சாலையில் உள்ள டாப் லைட் மைதானத்தில் 22-வது நிட் ஷோ ஜவுளி தொழில்நுட்ப இயந்திர கண்காட்சி துவங்கியது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் 400-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த கண்காட்சியில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த ஜவுளி தொழில்நுட்ப இயந்திர தயாரிப்பு நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளன. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அதிநவீன டிஜிட்டல் பிரிண்டிங் மெஷின் இக்கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இயந்திரம் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாது என்று கூறப்படுகிறது.
ஜப்பானில் தயாரிக்கப்பட்ட பிரிண்டிங் மிஷின் ஒரு மணி நேரத்தில் 350 பனியன்களுக்கு பிரிண்ட் அடிக்கும் திறன் கொண்டதாக உள்ளது. இந்த இரண்டு இயந்திரங்களும் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்துள்ளன.
திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் பேசுகையில், "பின்னலாடைத் துறைக்கு தேவையான அனைத்து இயந்திரங்களும் ஒரே அரங்கில் வைக்கப்பட்டுள்ளன. தொழிலாளர்கள் மற்றும் தொழில்துறையினரை அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கு கொண்டு செல்லும் வகையில் இயந்திரங்கள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன," என்றார்.
மேலும் அவர், "இது போன்ற கண்காட்சிகளை திருப்பூரில் தொடர்ந்து நடத்துவதற்கு தொழில்துறையினருக்கென நிரந்தர அரங்கம் அமைத்து தர அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். இரண்டு ஆண்டுகளில் திருப்பூரில் தொழில்துறையினர் சார்பில் இது போன்ற கண்காட்சிகள் நடத்துவதற்கு நிரந்தர அரங்கம் அமைக்கப்படும்," என்று தெரிவித்தார்.
இந்நிகழ்வில் திருப்பூர், டெல்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு நகரங்களைச் சேர்ந்த பின்னலாடைத் தொழில்துறையினர் கலந்து கொண்டனர்.