விவசாயிகளுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் சார்பில் நாளை முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட உள்ளது. இந்த போராட்டத்திற்கு பல்வேறு அமைப்புக்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றன.
யாரெல்லாம் ஆதரவு:
திமுக அழைப்பு விடுத்துள்ள இந்த பந்த்திற்கு காங்கிரஸ், இடதுசாரிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. முழுஅடைப்பு போராட்டத்திற்கு ஆதரவாக நாளை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆட்டோக்கள் ஓடாது என்று சிஐடியு அறிவித்துள்ளது.
தமிழ் மாநில காங்கிரஸ் பங்கேற்காது என அக்கட்சியின் தலைவர் வாசன் அறிவித்துள்ளார். பாமக-வும் ஆதரவளிக்கவில்லை. வணிகர் சங்கங்கள் ஆதரவு தருவதாக அறிவித்துள்ளன. இதனால் கடைகள், ஓட்டல்கள் அடைக்கப்பட்டிருக்கும். சினிமா தியேட்டர்களில் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
பந்த்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள கட்சிகளைச் சேர்ந்த அரசு போக்குவரத்து கழக ஊழியர்களும் போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாக அறிவித்துள்ளனர். சென்னை, கோவையில் ஆட்டோக்கள் ஓடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கம் போல் இயங்கும்:
தமிழகத்தில் பெட்ரோல் பங்குகள் வழக்கம் போல் இயங்கும் என பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபடுவார்கள் என பெட்ரோலிய பொருட்கள் வணிகர் சங்கத் தலைவர் முரளி அறிவிப்பு.
ஆளும் கட்சியைச் சேர்ந்த போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கத்தினரைக் கொண்டு பாதுகாப்பான முறையில் பேருந்துகளை வழக்கம் போல் இயக்க அரசு முடிவு செய்துள்ளது.
போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகளை இயக்குவதற்காக ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சென்னையில் மட்டும் 13,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.