கோவை அவினாசி சாலையில் தண்டு மாரியம்மன் கோவில் முன் நிறுத்தப்பட்டிருந்த கார் மீது ஆம்னி வேன் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் தம்பதியினர் சிறு காயங்களுடன் மீட்கப்பட்டனர். சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
Coimbatore: கோவை அவினாசி சாலையில் உள்ள அருள்மிகு தண்டு மாரியம்மன் கோவில் முன்பாக நிறுத்தப்பட்டிருந்த கார் மீது ஆம்னி வேன் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் கடந்த 13ஆம் தேதி நடந்துள்ளது.
அவினாசி சாலை மேம்பாலத்தின் கீழே உள்ள தண்டு மாரியம்மன் கோவில் முன்பாக கேரள மாநில பதிவெண் கொண்ட மாருதி சுஸுகி ஸ்விப்ட் கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது.
அப்போது வேகமாக வந்த ஆம்னி வேன் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது மோதியது. இந்த மோதலில் ஆம்னி வேனின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்தது.
விபத்தைக் கண்ட உடனேயே அருகில் இருந்தவர்கள் ஆம்னி வேனில் சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சிறிது நேர முயற்சிக்குப் பிறகு, வேனில் பயணித்த கணவன் மற்றும் மனைவி ஆகியோர் சிறு காயங்களுடன் மீட்கப்பட்டனர்.
இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த காட்சிகளில் வேகமாக வந்த ஆம்னி வேன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது மோதும் காட்சி தெளிவாகப் பதிவாகியுள்ளது.
இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.