கோவை காரமடை, பொள்ளாச்சியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு அனுமதி மறுப்பு, காவல்துறை தாக்குதல் குறித்து விவசாயிகள் சங்கம் கண்டனம். அரசின் நடவடிக்கைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்.
Coimbatore: கோவை செஞ்சிலுவை சங்கம் அருகே கட்சி சார்பற்ற ஐக்கிய விவசாயிகள் சங்கம் எஸ்கேபி(என்பி) சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவை காரமடை மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில் விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு அனுமதி மறுத்து, காவல்துறை ஆய்வாளர்கள் விவசாயிகளை துன்புறுத்தியதை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சங்கத்தின் தமிழக இணை ஒருங்கிணைப்பாளர் ஏ.எஸ்.பாபு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் முன்னிலை வகித்தார். போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் காவல்துறையினரின் நடவடிக்கையை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
பி.ஆர்.பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தமிழகத்தின் பல இடங்களில் டிராக்டர் பேரணி அமைதியாக நடைபெற்று வருகிறது. ஆனால் கோவை மாவட்டத்தில் காரமடை மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில் காவல்துறை ஆய்வாளர்கள் ராஜசேகர், வெங்கடேஷ் ஆகியோர் டிராக்டரில் வந்த விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தி, வாகனங்களை பறிமுதல் செய்தனர். பெண் விவசாயிகளை இரவு 7.30 மணி வரை தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்து சித்ரவதை செய்துள்ளனர். பலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது," என்று குற்றம்சாட்டினார்.
மேலும், "ஆகஸ்ட் 14-ம் தேதி நீதிமன்றம் வாகன பேரணி நடத்த அனுமதி அளித்திருந்தும், இரு காவல் ஆய்வாளர்கள் சட்ட விரோதமாகவும், நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் வகையிலும் செயல்பட்டுள்ளனர். தமிழக விவசாயிகள் மீது காவல்துறையை ஏவி திமுக அரசு பழிவாங்குகிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது," என்றார்.
"தவறு செய்த காவல் ஆய்வாளர்கள் மற்றும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், ஆகஸ்ட் 27-ம் தேதி திருச்சியில் நடைபெறும் சங்க கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானத்தை பொறுத்து அடுத்த கட்ட போராட்டங்களை தீவிரப்படுத்துவோம்," என பாண்டியன் எச்சரிக்கை விடுத்தார்.