பொள்ளாச்சி அருகே புரவிபாளையத்தில் 3 ஆண்டுகளுக்கு முன் பழங்குடியினருக்கு வழங்கப்பட்ட பட்டா நிலங்களை அளவீடு செய்யக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சார் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
Coimbatore: பொள்ளாச்சி அருகே உள்ள புரவிபாளையம் கிராமத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு 27 பழங்குடியின மக்களுக்கு அரசு சார்பில் வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. ஆனால், பட்டா வழங்கி மூன்று ஆண்டுகள் கடந்தும் இதுவரை நில அளவீடு செய்து தரப்படவில்லை என்று தெரிகிறது.
இந்நிலையில், நில அளவீடு செய்து தர வலியுறுத்தி இன்று பொள்ளாச்சியில் விடுதலை சிறுத்தை கட்சியின் மண்டல துணைச் செயலாளர் பிரபு தலைமையில் பழங்குடியின மக்கள் சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யாவிடம் மனு அளித்தனர்.
நில அளவீடு செய்து தரக்கோரி பலமுறை வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்களிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அவர்கள் குறிப்பிட்டனர். எனவே, நில அளவை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவு விட வேண்டும் என்று விடுதலை சிறுத்தை கட்சியினர் வலியுறுத்தினர்.
பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இந்த நில அளவீடு முக்கியமானது என்றும், இது அவர்களின் சமூக-பொருளாதார நிலையை உயர்த்த உதவும் என்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் தெரிவித்தனர். சார் ஆட்சியர் கேத்தரின் சரண்யா இந்த விவகாரத்தை கவனத்தில் கொண்டு, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.