185வது உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு, பொள்ளாச்சியில் புகைப்பட கலைஞர்கள் தலைக்கவச விழிப்புணர்வு இருசக்கர பேரணி நடத்தினர். நூற்றுக்கணக்கான வாகனங்கள் முக்கிய சாலைகளில் பவனி வந்தன.
கோவை: 185வது உலகப் புகைப்பட தின விழா ஆகஸ்ட் 19 அன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இதனையொட்டி, பொள்ளாச்சியில் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.
தமிழ்நாடு போட்டோ வீடியோ கலைஞர் தொழிற்சங்கம் மற்றும் வட்டார போக்குவரத்து துறை இணைந்து இந்த விழிப்புணர்வு பேரணியை ஏற்பாடு செய்திருந்தனர்.
பொள்ளாச்சி மகாலிங்கபுரம் பகுதியில் இருந்து தொடங்கிய இந்த பேரணி, கோவை சாலை, பாலக்காடு சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக சென்றது.
நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்களில் பங்கேற்ற புகைப்பட கலைஞர்கள், தலைக்கவசம் அணிந்தவாறு பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அண்மைக்காலமாக தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனங்களில் செல்லும்போது விபத்து ஏற்பட்டால் உயிரிழப்பு ஏற்படுவதாக பேரணி ஏற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டினர்.