பொள்ளாச்சி அருகே ஆழியார் பகுதியில் திடீர் சூறாவளி காற்று வீசியது. மரங்கள் விழுந்ததால் சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வீடுகள் மற்றும் வாகனங்களுக்கும் சேதம் ஏற்பட்டது.
கோவை: பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆழியார் சுற்றுவட்டார பகுதிகளில் திடீர் சூறாவளி காற்று வீசியதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சாலைகளில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் சீதோஷ்ண நிலை மாற்றம் காரணமாக சூறாவளி காற்று வீசி வருகிறது. இந்நிலையில், இன்று காலை பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆழியார் சுற்றுவட்டார பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. திடீரென பலத்த சூறாவளி காற்று வீச தொடங்கியது.
இதன் காரணமாக, சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்து சென்றன. பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
ஆழியார் பூங்கா அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு காரின் மீது மரம் விழுந்ததால், அந்த கார் முழுவதும் சேதமடைந்தது.
இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ஒரு மிகப்பெரிய ராட்சத மரம் விழுந்ததில் நான்கு வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து சூறாவளி காற்று வீசி வருவதால், வழக்கமாக பரபரப்பாக காணப்படும் ஆழியார்-வால்பாறை சாலை தற்போது வெறிச்சோடி காணப்படுகிறது. சாலை முழுவதும் விழுந்த மரங்களும் மரக்கிளைகளும் சிதறிக் கிடக்கின்றன.