கோவை மதுக்கரை அரசு மருத்துவமனையில் பணியாற்றிய 29 வயது பயிற்சி மருத்துவர் சந்தோஷ் திடீரென உயிரிழந்தார். வயிற்று உபாதைக்கு மருந்து எடுத்துக்கொண்ட பின்னர் ஓய்வு அறையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார்.
Coimbatore: கோவை மதுக்கரை அரசு மருத்துவமனையில் பணியாற்றிய பயிற்சி மருத்துவர் திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் அட்டப்பாடியைச் சேர்ந்த அருணாச்சலத்தின் மகன் சந்தோஷ் (29), கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுகலை இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். அவர் கோவை திருமலையம்பாளையம் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கி, தினமும் மதுக்கரை அரசு மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராகப் பணியாற்றி வந்தார்.
நேற்று காலை வழக்கம்போல சந்தோஷ் மதுக்கரை அரசு மருத்துவமனைக்குப் பணிக்காக வந்தார். மதியம் தனக்கு வயிற்று உபாதைகள் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்த செவிலியர்களிடம் தெரிவித்தார். இதற்காக மருந்து செலுத்திக் கொள்வதாகக் கூறி, மருந்து எடுத்துக்கொண்டு பயிற்சி மருத்துவர்கள் ஓய்வு எடுக்கும் அறைக்குச் சென்று ஓய்வெடுத்தார்.
நீண்ட நேரம் ஆகியும் சந்தோஷ் வெளியே வராததால், அங்கிருந்த மற்ற பயிற்சி மருத்துவர்கள் சென்று பார்த்தபோது அவர் உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. உடனடியாக மதுக்கரை காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விரைந்து வந்த காவல்துறையினர் சந்தோஷின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பயிற்சி மருத்துவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு காரணமா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த திடீர் மரணம் மருத்துவத்துறையினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சந்தோஷின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அவரது இழப்பால் பெரும் துயரத்தில் உள்ளனர். மரணத்திற்கான உண்மையான காரணத்தை அறிய காவல்துறையின் விசாரணை முடிவுகளுக்காக அனைவரும் காத்திருக்கின்றனர்.