கோவையில் நடைபெற்ற பிஎஸ்என்எல் விளையாட்டு போட்டிகளின் போது, தமிழக பிஎஸ்என்எல் தலைமை பொது மேலாளர் பனவத் வெங்கடேஸ்வரலு இரண்டு மாதத்தில் தமிழகம் முழுவதும் 4ஜி சேவை அமல்படுத்தப்படும் என்று அறிவித்தார்.
Coimbatore: கோவை நேரு விளையாட்டு அரங்கில் பிஎஸ்என்எல் சார்பில் நடைபெற்று வரும் விளையாட்டுப் போட்டிகளின் இறுதி நாளன்று, தமிழக பிஎஸ்என்எல் தலைமை பொது மேலாளர் பனவத் வெங்கடேஸ்வரலு மற்றும் கோவை மாவட்ட பிஎஸ்என்எல் முதன்மை பொது மேலாளர் சங்கர் ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டனர்.
கோவை மாவட்ட பிஎஸ்என்எல் முதன்மை பொது மேலாளர் சங்கர் கூறுகையில், "தமிழகத்தில் 500க்கும் மேற்பட்ட குக்கிராமங்களில் 4ஜி சேவை வழங்கப்படும். கோவையில் ஆனைகட்டி பகுதியில் உள்ள ஐந்து கிராமங்களுக்கு நேரடியாக 4ஜி சேவை வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் எட்டு பகுதிகளில் கோவையில் 4ஜி சேவை வழங்கப்பட உள்ளது. இரண்டு மாதத்தில் நான்கரை லட்சம் புதிய பயனர்கள் சேர்ந்துள்ளனர், இரண்டு லட்சம் பேர் மற்ற நிறுவனங்களிலிருந்து மாறியுள்ளனர்," என்றார்.
அவர் மேலும், "தமிழகத்தில் 5 லட்சம் பைபர் டூ ஹோம் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. கோவை மற்றும் நீலகிரியில் 45,000 இணைப்புகள் செயல்பாட்டில் உள்ளன. அடுத்த ஆண்டில் இந்த எண்ணிக்கையை இரட்டிப்பாக்க திட்டமிட்டுள்ளோம். தமிழகத்தில் உள்ள 30,296 அரசுப் பள்ளிகளில் 21,659 பள்ளிகளுக்கு பைபர் டூ ஹோம் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. கோவையில் மட்டும் 1,271 இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன," என்று தெரிவித்தார்.
தமிழக பிஎஸ்என்எல் தலைமை பொது மேலாளர் Banavathu Venkateshwaralu கூறுகையில், "பிஎஸ்என்எல் மொபைல் கட்டணங்களை உயர்த்த திட்டமில்லை. 24 மணி நேரமும் இயங்கும் வாட்ஸ்அப் சேட் பாட் வாடிக்கையாளர்களுக்கு உதவும். ஒரு பயனர் ஒன்பது பிஎஸ்என்எல் சிம் கார்டுகள் வரை பெறலாம்."
"இரண்டு மாதத்திற்குள் தமிழகம் முழுவதும் 4ஜி சேவையை அமல்படுத்துவோம். இந்த ஆண்டு இறுதியில் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்படும். தற்போது 10Mbps வேகத்தில் இணைய சேவை வழங்கப்படுகிறது. பிஎஸ்என்எல் 4ஜி உபகரணங்கள் அனைத்தும் TCS போன்ற இந்திய நிறுவனங்களிடமிருந்தே பெறப்படுகின்றன," என்றார்.
அவர் மேலும், "பயனர்களின் தரவுகளுக்கு 100% பாதுகாப்பு உறுதி செய்யப்படும். சிபிஐ போன்ற அரசு அமைப்புகளுக்கு மட்டுமே தரவுகளைப் பெறும் உரிமை உள்ளது, அவர்களின் அனுமதியின்றி யாரும் பயனர் தரவுகளைப் பெற முடியாது," என்று உறுதியளித்தார்.