கோவை டவுன்ஹால் அருகே உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் திருடர்கள் பூட்டை உடைத்து ரூ.1,44,877 பணம் கொள்ளையடித்துள்ளனர். உக்கடம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Coimbatore: கோவை நகரின் மையப்பகுதியில் உள்ள டவுன்ஹால் மணிக்கூண்டு அருகே அமைந்துள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் திருடர்கள் பூட்டை உடைத்து பணம் கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து பூம்புகார் விற்பனை நிலைய மேலாளர் ஆனந்தன் உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
புகாரில் கூறியுள்ள விவரங்களின்படி, திருடர்கள் விற்பனை நிலையத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து, மொத்தம் ரூ.1,44,877 பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த உக்கடம் காவல் நிலைய போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
காவல்துறையினர் விற்பனை நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்களின் பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், கொள்ளையர்களை கண்டுபிடிக்க தடயவியல் நிபுணர்களின் உதவியையும் நாடியுள்ளனர். விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.