கோவையில் கிருஷ்ண ஜெயந்தி அரசு விடுமுறை நாளில் இயங்கிய CBSE பள்ளி, மாவட்ட கல்வி அலுவலரின் உத்தரவுக்குப் பிறகு மதியம் விடுமுறை அறிவித்தது. மாணவர்கள் உற்சாகத்துடன் வீடு திரும்பினர்.
Coimbatore: கோவையில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தமிழக அரசு அறிவித்த பொது விடுமுறையை மீறி இயங்கிய ஒரு பள்ளி, மாவட்ட கல்வி அலுவலரின் உத்தரவுக்குப் பிறகு மதியம் விடுமுறை அளித்தது.
புளியகுளம் பகுதியில் உள்ள வித்யா நிகேதன் என்ற CBSE பாடத்திட்டப் பள்ளி இன்று காலை முதல் இயங்கியது. LKG மற்றும் UKG மாணவர்களுக்கு கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமிட்டு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஆனால் மற்ற வகுப்பு மாணவர்கள் வழக்கம் போல் பள்ளி சீருடையில் வந்து வகுப்புகளில் கலந்து கொண்டனர்.
இந்த விவகாரம் மாவட்ட கல்வி அலுவலரின் கவனத்திற்கு சென்றதும், உடனடியாக பள்ளிக்கு விடுமுறை அளிக்க உத்தரவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, பள்ளி நிர்வாகம் மதியம் 12 மணிக்கு விடுமுறை அறிவித்தது. பெற்றோர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் இந்த தகவல் அனுப்பப்பட்டது.
மதியம் எதிர்பாராத விடுமுறை கிடைத்ததால் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர். பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து தங்கள் குழந்தைகளை அழைத்துச் சென்றனர். அரசு விடுமுறை நாளில் பள்ளி இயங்கியது குறித்து பெற்றோர்கள் மத்தியில் அதிருப்தி நிலவியது.
பள்ளி நிர்வாகம் கூறுகையில், கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களுக்காகவே பள்ளி திறந்திருந்ததாகவும், மாவட்ட கல்வி அலுவலரின் உத்தரவைப் பெற்றவுடன் உடனடியாக விடுமுறை அறிவித்ததாகவும் தெரிவித்தனர்.