கோவை சிவானந்தா காலனியில் விஸ்வ இந்து பரிஷத் சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு ஊர்வலம் சென்றனர்.
கோவை: கோகுலாஷ்டமியை முன்னிட்டு கோவை சிவானந்தா காலனி பகுதியில் விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் கிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இந்த விழாவில் 500-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கிருஷ்ணர், ராதை வேடமிட்டு பங்கேற்றனர்.
விழாவை முன்னிட்டு, ரத்தினபுரி பகுதியில் இருந்து ஆரம்பமான ஊர்வலம் சிவானந்தா காலனி பகுதியில் உள்ள வீதிகள் வழியாக சென்றது. குழந்தைகள் அணிந்திருந்த கிருஷ்ணர், ராதை வேடங்கள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தன.
ஊர்வலம் நிறைவடைந்த பின்னர், சிவானந்தா காலனி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேடையில் தோன்றிய சிறுவர் சிறுமியர் பக்தி பாடல்களுக்கு நடனமாடி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தனர்.
நிகழ்ச்சியில் குழந்தைகளை மகிழ்விக்கும் விதமாக மேஜிக் ஷோவும் நடத்தப்பட்டது. இந்த மாய வித்தைகள் குழந்தைகளை பிரமிக்க வைத்தன. விழாவில் பங்கேற்ற அனைத்து சிறுவர், சிறுமியர்களுக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.