உடுமலை அருகே அடிவள்ளி பகிர்மான கால்வாயில் தண்ணீர் திருட்டு நடைபெற்றதாக கூறி, நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அடிவள்ளி பகிர்மான கால்வாயில் தண்ணீர் திருட்டு நடைபெற்றதாக கூறி, நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருமூர்த்தி அணையில் இருந்து இரண்டாம் மண்டல பாசனத்திற்கு கடந்த 18ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. புதுப்பாளையம் கிளை கால்வாய் மூலம் அடிவள்ளி பகிர்மான கால்வாயில் கடந்த 20ஆம் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. முதல் சுற்றில் அடிவள்ளி பகிர்மான கால்வாயில் உள்ள 7 மடைகளுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு, 26ஆம் தேதி அடைக்கப்பட்டது.
ஆனால், அடிவள்ளி பகிர்மான கால்வாய்க்கு உட்பட்ட 170 ஏக்கரில் 70 ஏக்கர் நிலத்திற்கு தண்ணீர் முழுமையாக சென்றடையவில்லை. இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில், நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
விவசாயிகள் கூறுகையில், "அடிவள்ளி பகிர்மான கால்வாயில் சட்டவிரோதமாக கான்கிரீட் சுவர் அமைத்தும், பெரிய குழாய் அமைப்பு மூலம் தண்ணீரை திருடி உள்ளனர். இதனால் கடைமடை வரை உள்ள விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை கிடைக்கும் தண்ணீரை முறைகேடாக திருடி உள்ளதால் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்," என்றனர்.
மேலும், "சட்டவிரோதமாக வாய்க்காலை உடைத்தும், பெரிய பைப்லைன் அமைத்து பாசன நீரை திருடியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பாசன நீர் கிடைக்காத விவசாயிகளுக்கு முதல் சுற்றில் கிடைக்க வேண்டிய அளவு தண்ணீரை கிடைப்பதற்கான வழிவகை செய்ய வேண்டும்," என்று கோரிக்கை விடுத்தனர்.
பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால், விவசாயிகளை ஒன்று திரட்டி தொடர் போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் விவசாயிகள் எச்சரித்தனர்.