தமிழ் புலிகள் கட்சித் தலைவர் நாகை திருவள்ளுவனுக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக கூறி, 24 மணி நேர துப்பாக்கி ஏந்திய காவல் பாதுகாப்பு கோரி திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது.
திருப்பூர்: தமிழ் புலிகள் கட்சித் தலைவர் நாகை திருவள்ளுவனுக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாக கூறி, அவருக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய காவல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி தமிழ் புலிகள் கட்சியினர் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
தமிழ் புலிகள் கட்சி திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் கார்த்திக் தலைமையில், 20க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் இன்று திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.
மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: "தமிழ் புலிகள் கட்சியின் மாநில தலைவர் நாகை திருவள்ளுவன் சமூக நீதிக்காக தொடர்ச்சியாக மக்கள் மத்தியில் போராடி களப்பணியாற்றி வருகிறார். அரசியல் ரீதியாக பல்வேறு கருத்துக்களை முன்வைத்து வருகிறார். இந்நிலையில், சமூக வலைதளங்களில் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் பல்வேறு பதிவுகள் வெளியாகி வருகின்றன. இது தொடர்பாக உரிய விசாரணை நடத்த வேண்டும் என தமிழ் புலிகள் கட்சி சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் புகார் மனு அளிக்கப்பட்டு வருகிறது."
இதன் தொடர்ச்சியாக, திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. தமிழ் புலிகள் கட்சியின் மாநில தலைவரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும், மேலும் தமிழ் புலிகள் கட்சியின் மாநில தலைவருக்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய காவல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.