கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, மத்திய அரசின் அணுகுமுறையை விமர்சித்தார். தமிழகத்திற்கான உரிமைகளை வழங்குவதில் காலதாமதம் செய்வதாக குற்றம்சாட்டினார்.
Coimbatore: கோவை விமான நிலையத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா செய்தியாளர்களை சந்தித்தார். அவர் மத்திய அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்தார்.
திருச்சி சிவா கூறுகையில், "தமிழகத்திற்கு நியாயமாக தர வேண்டியதை கூட தர தாமதிக்கிறார்கள். முதல்வர் கடிதம் எழுதியிருக்கிறார். எங்களைப் போன்றவர்கள் தனிப்பட்ட முறையில் கோரிக்கை வைக்கிறோம். ஒரு கண்ணுக்கு வெண்ணையும் ஒரு கண்ணுக்கு சுண்ணாம்பும் காட்டக்கூடாது. வட மாநிலங்களுடன் ஒப்பிடும்பொழுது தமிழ்நாடு பலவகையில் முன்னேற்றம் கண்டிருக்கிறது. இந்த மாநிலத்தை வேறு கட்சி ஆள்கிறது என்ற பார்வையை ஒன்றிய அரசு தவிர்த்திட வேண்டும்," என்றார்.
திருச்சியில் NIT கல்லூரி வளாகத்தில் நடந்த மாணவி பாலியல் துன்புறுத்தல் சம்பவம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, "உலகில் எந்த மூலையிலும் இது போன்ற பாதகம் ஏற்பட்டாலும் அது கண்டிக்கத்தக்கது. அரசுகள் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும். அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்," என்று பதிலளித்தார்.
மேலும் அவர், "கொல்கத்தா விவகாரத்தில் ஒன்றிய அரசு அக்கறை காட்டுவதை குறை சொல்லவில்லை. ஆனால் மணிப்பூரில் நடைபெற்ற வன்முறை சம்பவங்கள், பாலியல் சம்பவங்கள் குறித்து பாஜக கவலைப்படவில்லை. உள்துறை அமைச்சர் இது குறித்து அறிக்கை கூட சமர்ப்பிக்கவில்லை. நாட்டு மக்கள் இதையெல்லாம் பார்த்து இந்த அரசின் செயல்பாடுகளை எடை போட வேண்டும்," என்று தெரிவித்தார்.
"ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கருத்து, கொள்கை இருக்கும். அரசாங்கத்தை நடத்துபவர்களுக்கு சில கடமைகள் இருக்கும். அந்த வகையில் தான் பழனி முருகன் மாநாட்டை பார்க்க வேண்டும்," என்று குறிப்பிட்டார்.
திருச்சி சிவா தனது உரையை முடிக்கும்போது, "ஒன்றிய அரசுடன் தமிழ்நாடு உரசலில் இல்லை. கடமையை செய்கிறோம் உரிமைகளை எதிர்பார்க்கிறோம். ஒன்றிய அரசு நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறோம்," என்று கூறி முடித்தார்.