கோவை விமான நிலையத்தில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் பாஜக நிலை, தேசிய கல்விக் கொள்கை, மொழி பிரச்சினை குறித்து கருத்து தெரிவித்தார். பாஜக தலைவர் ஜெ.பி.நட்டாவின் வருகை குறித்தும் பேசினார்.
கோவை: கோவை விமான நிலையத்தில் முன்னாள் ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான தமிழிசை சௌந்தராஜன் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.
பாஜக அகில இந்திய தலைவர் ஜெ.பி.நட்டாவின் கோவை வருகை குறித்து பேசிய தமிழிசை, அவரை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைவதாகக் கூறினார். அண்ணாமலை வெளிநாடு செல்வதையடுத்து, எச்.ராஜா தலைமையிலான ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதை வரவேற்றார். கட்சியில் ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்கும் இலக்கை நோக்கி செயல்படுவதாகவும் தெரிவித்தார்.
தான் ஒருங்கிணைப்புக் குழுவில் இடம்பெறாதது குறித்த கேள்விக்கு பதிலளித்த தமிழிசை, எந்த எதிர்பார்ப்பும் இன்றி கட்சியில் பணியாற்றி வருவதாகவும், முழு நேரமாக கட்சியில் உழைத்தவர்களுக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் கூறினார். இடைக்கால தலைவர் பற்றிய பேச்சுக்கள் அனைத்தும் யூகங்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
தமிழக முதல்வரின் வெளிநாட்டு பயணம் குறித்து கருத்து தெரிவித்த தமிழிசை, பெரும்பாலான முதலீடுகள் ஏற்கனவே தமிழ்நாட்டில் உள்ள நிறுவனங்களின் விரிவாக்கப் பணிகளே என்றும், இவற்றை புதிய முதலீடுகளாக கருத முடியாது என்றும் கூறினார்.
சம்மரிக்க்ஷா அபியான் திட்டம் குறித்து பேசிய அவர், இது குழந்தைகளின் கற்றல் திறனை மேம்படுத்தும் திட்டம் என்றும், தமிழக அரசு இதை ஏற்க மறுப்பது மாணவர்களின் கல்வி எதிர்காலத்தை பாதிக்கும் என்றும் தெரிவித்தார். தேசிய கல்விக் கொள்கையில் தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாகவும், தனியார் பள்ளிகளில் ஹிந்தி கற்பிக்கப்படுவது போல அரசு பள்ளிகளிலும் கற்பிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மொழி குறித்து பேசிய தமிழிசை, தமிழ் மொழிக்கு பிரதமர் அளித்துள்ள மரியாதையை போல தமிழகத்தில் உள்ள தலைவர்கள் கூட கொடுத்ததில்லை என்றார். ஹிந்தி கற்க விரும்புவோருக்கு வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்றும், மற்ற மொழிகளை கற்றுக் கொள்வதை தமிழ் தாய் தடுக்காது என்றும் குறிப்பிட்டார்.
மலையாள திரைத்துறையில் பெண்கள் மீதான பாலியல் புகார்கள் குறித்து விசாரிக்க ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதை வரவேற்றார். நடிகர் விஜய் ஷீரடி கோவிலில் சாமி தரிசனம் செய்தது குறித்தும் கருத்து தெரிவித்த தமிழிசை, கடவுள் நம்பிக்கையோடு மக்கள் சேவை செய்வது வரவேற்கத்தக்கது என்றார்.