கோவையில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணி 'ஒழுக்கமே சுதந்திரம்' என்ற தலைப்பில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. மது, போதை, ஆபாசம் மற்றும் ஒழுக்கக் கேடுகளுக்கு எதிரான இந்த பிரச்சாரம் பல்வேறு நிகழ்வுகளை உள்ளடக்கியது.
கோவை: ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணி, 'ஒழுக்கமே சுதந்திரம்' என்ற தலைப்பில் அகில இந்திய அளவில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. இந்த பிரச்சாரம் 2024 செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ளது.
இப்பிரச்சார இயக்கத்தை முன்னிட்டு கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் 30 ஆகஸ்ட் 2024 அன்று காலை 11 மணி அளவில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இச்சந்திப்பில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கோவை மாநகர மகளிர் அணி தலைவர் ஜஹீனா அஹமது, மகளிர் அணி செயலாளர் ஷர்மிளா அப்துல்லாஹ், கோவை தெற்கு மண்டல மகளிர் அணி தலைவர் சலீனா பாரி, மகளிர் அணிச் செயலாளர் பெனாசிர் சமது, கோவை வடக்கு மண்டல மகளிர் அணி தலைவர் கமருன்னிஷா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த சந்திப்பில் பேசிய ஜஹீனா அஹமது, "மது, போதைக் கலாச்சாரம் இன்று பெருகிக் கொண்டிருக்கிறது. குடி நோயாளிகளின் நாடாக இந்தியா மாறி வருகிறது. பள்ளி மாணவர்கள் தொடங்கி ஆண், பெண் வேறுபாடின்றி மது அருந்துகின்றனர். இதனால் தீமைகள் பெருகிவிட்டன. நோய்கள் அதிகரித்துவிட்டன. விபத்து, கொலை, கொள்ளை, பாலியல் வன்புணர்வு என அனைத்துத் தீமைகளுக்கும் தாயாக மது இருக்கிறது," என்றார்.
மேலும் அவர், "போதை நாட்டையே நாசப்படுத்திவிடும் என்பதால் போதைப் பொருள்கள் இல்லாத தமிழ்நாடு என்ற திட்டத்தை மு.க.ஸ்டாலின் முன்னெடுத்துள்ளதை நாங்கள் வரவேற்கிறோம். ஆகஸ்ட் 11 ஆம் நாள் போதைக்கு எதிரான நாளாக அறிவித்து மாணவர்கள், பள்ளி, கல்லூரிகளில் விழிப்பு உணர்வை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தி வருவது பாராட்டுக்குரிய முயற்சி. அதே வேளையில் மதுவை தடை செய்யாமல் போதை இல்லா பாதை சாத்தியம் இல்லை என்பதை உணர்ந்து தமிழ்நாடு அரசு பூரண மதுவிலக்கைக் கொண்டுவர வேண்டும்," என்று கூறினார்.
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்தும் அவர் பேசினார். "இந்தியாவில் தினமும் 90 பாலியல் வன்புணர்வுகள் நிகழ்வதாகவும், ஆண்டுதோறும் 32,000 பாலியல் வன்புணர்வு வழக்குகள் பதிவாவதாக ஒன்றிய அரசின் NCRB தெரிவிக்கிறது. சட்டங்கள் கடுமையாக்கப்பட்டாலும், சிந்தனை மாற்றமும், இறையச்சமுமே பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும்," என்றார்.
இந்த பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, கோவையில் பல்வேறு நிகழ்வுகள் திட்டமிடப்பட்டுள்ளன. இதில் அனைத்து சமயத் தலைவர்கள் ஒன்றிணையும் கருத்தரங்கங்கள், பொதுக்கூட்டங்கள், தெருமுனைப் பிரச்சாரக் கூட்டங்கள், நோட்டீஸ் விநியோகம், இல்லங்களில் சந்திப்புகள், அரங்கக் கூட்டங்கள், தனி நபர் கவுன்சிலிங், கண்காட்சிகள், பேரணி, மனிதச்சங்கிலி, சமூக வலைதள பிரச்சாரம், பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்வுகள், ஆசிரியர்களுக்கான கலந்துரையாடல்கள், உறுதி மொழி ஏற்பு நிகழ்வுகள் ஆகியவை அடங்கும்.
போன்ற பல்வேறு நிகழ்வுகள் மூலம் கோவையில் 15 லட்சம் மக்களை சந்தித்து விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இது முஸ்லிம் பெண்கள் முன்னெடுக்கும் பரப்புரைதானே தவிர இது முஸ்லிம்களுக்கான, பெண்களுக்கான பரப்புரை அல்ல. ஒட்டு மொத்த மனித குலத்திற்கும் நாங்கள் அழைப்பு விடுக்கின்றோம். அனைவரும் இந்த நல்ல நோக்கத்திற்காக ஒன்றிணைவோம். ஒழுக்க மாண்புள்ள சமுதாயத்தை உருவாக்குவோம் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து ‘ஒழுக்கமே சுதந்திரம்’ பிரச்சார இயக்கத்தின் இலச்சினை (LOGO) வெளியிடப்பட்டது. மேலும் Dr. KVS ஹபீப் முஹம்மது அவர்கள் எழுதிய ‘ஒழுக்கமே சுதந்திரம்’ எனும் தலைப்பிலான புத்தகம் வெளியிடப்பட்டது. - வழங்கியவர்: சபீர் அஹமது, மீடியா செயலாளர், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், கோவை பெருநகரம்.