இயக்குநர் ராஜமௌலியின் இயக்கத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பாகுபலி 2 திரைப்படம் தமிழக திரையரங்குகளில் வெலியாவதற்கு முன்பே இணையதளத்தில் வெளியாகியுள்ள சம்பவம் படக் குழுவினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பிரபாஸ், தமனா, அனுஷ்கா, சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ள பாகுபலி 2 இயக்குநர் ராஜமௌலி இயக்கியுள்ளார். இதில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான பாகுபலி முதல் பாகம் இந்திய திரையுலகில் மட்டுமின்றி உலக திரையுலகிலும் பெரும் வெற்றியினை பெற்றது.
அதில், கட்டப்பா எதற்காக பாகுபலியை கொன்றார் ? என்ற கேள்வி கடந்த இருவருடங்களில் மக்களின் மனநிலையில் ஒட்டிக்கொண்டது. அதற்கான விடையே இரண்டாம் பாகம் என்பதால் பாகுபலி 2 திரைப்படத்தினைக் காண ரசிகர்கள் பலர் திரையரங்குகளில் நீண்ட வரிசையில் நின்று டிக்கெட்டுகளை வாங்கினர்.
இதனிடையே, தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள் பிரச்சனை காரணமாக இன்று (ஏப்ரல் 28) அதிகாலை முதலே வெளியாக இருந்த பாகுபலி 2 திரையிடாமல் ரத்து செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, நடைபெற்ற பேச்சுவார்த்திக்குப் பிறகு இன்று 11 மணியளவில் பாகுபலி 2 தமிழகம் முழுவதும் திரைக்கு வந்தது.
இந்நிலையில், இன்று காலை பாகுபலி 2 திரையரங்கில் வெளியிடுவதற்கு முன்பே முழுத் திரைப்படத்தையும் தமிழ்ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியாகியது.
இதனால் படக்குழுவினர் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். பல கோடி ரூபாய் தொகையில் எடுக்கப்பட்ட பிரம்மாண்டமான திரைப்படங்கள் தொடர்ந்து இணையதளத்தில் வெளியாவது தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களுக்கு பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது எனபது குறிப்பிடத்தக்கது.