கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலம், 88-வது வார்டுக்குட்பட்ட குனியமுத்தூர் பகுதியில் வசிக்கம் வீடுகளுக்குச் செல்லும் மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்தெடுக்கும் பணிகளில் ஈடுபட்டுவருவதை கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் இன்று நேரில் சென்று பார்வையிட்ட ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து, குனியமுத்தூரில் அமைந்துள்ள அரசு அலுவலர் குடியிருப்புப் பகுதியில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு வரும் மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் அலுவலக கட்டிடத்தையும், மாநகராட்சிப் பூங்காவையும் க.விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, குனியமுத்தூர், சோழன் நகரில் பொது மக்கள் பயன்பாட்டில் உள்ள திறந்தவெளி கிணற்றை ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருவதையும் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார்.

இந்த நிகழ்வின் போது மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலருடன் நகர் நல அலுவலர் கே.சந்தோஷ்குமார், தெற்கு மண்டல உதவி ஆணையர் ரவி, மாநகராட்சிப் பொறியாளர்கள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.