வெள்ளலூர் குப்பை கிடங்கில் தரம் பிரிக்காமல் கொட்டப்படும் குப்பைக் கழிவுகளினால் பல்வேறு தீமைகள் ஏற்பட்டு வருகின்றன என பசுமைத் தீர்ப்பாயத்தில் மதிமுக கோவை மாவட்ட இளைஞரணி சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிமன்றத்திற்கு வந்த நிலையில், இதுகுறித்து நீதிபதி பி.ஜோதிமணி மற்றும் எக்ஸ்பெர்ட் மெம்பர் பி.எஸ்.ராவ் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். இதில், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் நீர் மாதிரி சோதனை முடிவுகளும், நிலத்தடி நீர் மாசடைந்துள்ளது குறித்தான அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.
மேலும், குப்பை கிடங்கில் பல ஆண்டுகளாக தரம் பிரிக்காமல் கொட்டப்பட்டு கிடக்கின்ற 19 லட்சம் டன் குப்பைகள் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதையும் மதிமுக இளைஞரணி சார்பில் ஆதாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, பி.எஸ்.ராவ் உடன் ஆலோசனை மேற்கொண்ட நீதிபதி பி.ஜோதிமணி, தரம் பிரிக்காமல் கொட்டப்பட்டிருக்கும் 19 லட்சம் டன் குப்பைகளை மூட உடனடியாக காலநிர்ணயத்துடன் அறிக்கை சமர்பிக்க வேண்டும். தினமும் சேகரமாகும் 1000 டன் குப்பையை கையாள பிரித்தெடுக்கும் திட்டத்தையும் அதை எப்போது நிறைவேற்றுவோம் என்பதற்கான அறிக்கையும் சமர்பிக்கப்பட வேண்டும். உடனடியாக மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் 100 சதவிகிதம் கழிவுகளை பிரித்தெடுக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். தரம் பிரிக்காத குப்பைகளை வெள்ளலூர் குப்பை கிடங்கில் கொட்டக்கூடாது. பழைய குப்பைகளுடன் புதிய குப்பைகளை கலக்கக்கூடாது என உத்தரவு பிரப்பித்தார்.