திருப்பூரில் தமிழ்நாடு சர்வோதய சங்க ஊழியர்கள் பொருட்கள் உற்பத்தி முடக்கம் மற்றும் விற்பனை வீழ்ச்சியை எதிர்த்து தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வேலை இழப்பு அச்சுறுத்தலும் உள்ளது.
Coimbatore: திருப்பூரில் தமிழ்நாடு சர்வோதய சங்க ஊழியர்கள் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பொருட்கள் உற்பத்தி முடக்கம் மற்றும் விற்பனை வீழ்ச்சியை எதிர்த்து இந்த போராட்டம் நடைபெறுகிறது.
தமிழ்நாடு சர்வோதய சங்கம் மூலமாக ஏராளமான கைவினைப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு காதி கிராப்ட் மையங்கள் வழியாக விற்பனை செய்யப்பட்டு வந்தன. மூங்கில் பொருட்கள், ஊதுபத்தி, சோப், மெத்தைகள், கைவினை பொருட்கள் என பல்வேறு பொருட்கள் இங்கு உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வந்தன. இந்த பொருட்களின் தரம் காரணமாக பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு இருந்து வந்தது.
ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக திருப்பூர் தலைமை அலுவலகத்தில் பொருட்கள் முறையாக உற்பத்தி செய்யப்படவில்லை என்றும், வெளியில் இருந்து கொள்முதல் செய்யும் பொருட்களை கொள்முதல் செய்து தராமல் மெத்தனம் காட்டி வருவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. இதன் காரணமாக விற்பனை பெருமளவு சரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் வேலை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், உடனடியாக உற்பத்தியை அதிகரித்து சர்வோதய சங்கத்தை மீட்டெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் சர்வோதய சங்க விற்பனையாளர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் திருப்பூர் காந்திநகர் பகுதியில் அமைந்துள்ள தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.