மாநில முழுவதும் கல்வித்துறையின் மூலம் ஆசிரியர் தகுதித்தேர்வு இன்று நடைபெற்று வருகிறது. கோயம்புத்தூர் மாவட்டம் புனித மரியம்மை மேல்நிலைப்பள்ளி இன்று நடைபெற்று வரும் ஆசிரியர் தகுதித்தேர்வு மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் பார்வையிட்டார்.

இது குறித்து அவர் பேசுகையில்;
மாநில முழுவதும் கல்வித்துறையின் மூலம் ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெற்று வருகிறது. கோயம்புத்தூரில் இன்று தாள் 1-க்கான தேர்வு நடைபெற்று வருகிறது. இதற்காக 17 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 7944 தேர்வர்கள் எழுதி வருகிறார்கள். நாளை (30.04.2017) ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2-க்கான எழுத்துத் தேர்வு நடத்தப்படவுள்ளது. இதற்காக 36 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 17,632 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர் 35 தேர்வு மையங்களில் இத்தேர்வு நடைபெறுகின்றது.
இத்தேர்வினை நடத்த 257 முதன்மை கண்காணிப்பாளர்கள், 1387 தேர்வு அறை கண்காணிப்பாளர்களும், 557 சோதனை அலுவலர்களும் என மொத்தம் 2201 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இத்தேர்வில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு தேர்வு மையத்திற்கு செல்ல ஏதுவாக தேர்வு மையங்கள் அமைந்துள்ள பகுதிக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தால் பேருந்துகள் இயக்கிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் பாதுகாப்பின் பொருட்டு போதுமான காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு மையத்திற்கு காவல்துறையினரால் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியத்தால் மின்சார வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
தேர்வு எழுதுபவர்கள் ஏதேனும் முறைகேட்டில் ஈடுப்பட்டால் அவர்கள் எதிர்காலத்தில் அரசு தேர்வுகள் எழுத தடை செய்யப்படுவது மட்டுமின்றி அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. தேர்வானது எந்தவிதமான தடையும்மின்றி அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் தெரிவித்தார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்முருகன் கலந்து கொண்டார்.