பிரேமம் திரைப்பட புகழ் நடிகை சாய்பல்லவியின் தங்கை பூஜா கண்ணனும் திரைபட துறையில் களமிறங்குகிறார்.மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சராக நடித்த சாய் பல்லவி,படத்தின் வெற்றி மற்றும் அவரது நடிப்பால் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாய் மலையாளத்தில் திரைபடங்களில் பிசியாக உள்ளார். மலையாளத்தில் தமிழ் பெண்ணாக நடித்து ரசிகர்களின் மனங்களை கவர்ந்த சாய் பல்லவி, இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தமிழ் திரைப்படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சாய் பல்லவியின் தங்கை பூஜா கண்ணன் கோலிவுட்டில் களமிறங்க உள்ளார். இதன் முன்னோட்டமாக பூஜா கண்ணன் நாயகியாக நடித்த கரா என்ற குறும்படம் இன்று யுடியுப்பில் வெளியிடப்பட்டது.
கோவை காந்திபார்க் பகுதியில் உள்ள ஒரு திரையரங்கில் திரையிடப்பட்ட இந்த குறும்படத்தை பொதுமக்கள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் பார்த்தனர்.இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பூஜா கண்ணன்,கோவையில் தனியார் கல்லூரியில் இளங்கலை ஆங்கிலம் படித்து வருவதாகவும் அக்கா சாய் பல்லவி சினிமா துறையில் இருப்பதை தொடர்ந்து தனக்கும் பட வாய்ப்புகள் வருவதாக கூறியவர் கல்லூரி படிப்பு முடிந்தவுடன் திரைப்படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறிய பூஜா கண்ணன், நல்ல கதையுடன் கூடிய பட வாய்ப்புகள் வந்தால் தற்போதே படங்களில் நடிக்க ரெடியாக இருப்பதாக தெரிவித்தார்.கோவையை சேர்ந்த இளைஞர்கள் உருவாக்கியுள்ள இந்த கரா குறும்படத்தை, ஆஜித் என்ற இளைஞர் இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.