மேட்டுப்பாளையத்தில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு வடிவங்களில் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பவானி ஆற்றில் கரைக்கப்பட்டன.
கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் கோலாகலமான ஊர்வலம் நடைபெற்றது. இரண்டு நாட்கள் வழிபாட்டுக்குப் பிறகு, பல்வேறு இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பவானி ஆற்றில் கரைக்கப்பட்டன.
மேட்டுப்பாளையம் சி.டி.சி டெப்போ பகுதியிலிருந்து துவங்கிய ஊர்வலம், சுப்பிரமணியர் கோவில் பகுதியில் உள்ள பவானி ஆற்றில் முடிவடைந்தது.
ஊர்வலத்தின் போது, சென்டை மேளம் முழங்கியது, மேலும் கேரள நடனக் கலைஞர்கள் முருகன், பட்டாம்பூச்சி போன்ற வேடங்களில் கண்கவர் நடன நிகழ்ச்சிகளை அரங்கேற்றினர்.
ஊர்வலத்தில் பல்வேறு வடிவங்களில் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் இடம்பெற்றன.
மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள், ரூபாய் நோட்டுகள் மூலம் அலங்கரிக்கப்பட்ட விநாயகர், கருடன் தேரோட்டியாக வலம் வந்த விநாயகர் என பல வித்தியாசமான வடிவங்களில் விநாயகர் சிலைகள் காட்சியளித்தன. இந்து முன்னணி நிர்வாகிகள் ஊர்வலத்தை முன்னின்று நடத்தினர்.
கண்கவர் வான வேடிக்கைகளுடன் நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் ஏராளமான பொதுமக்கள் சாலையின் இரு புறங்களிலும் நின்று ஆர்வத்துடன் பார்வையிட்டனர். விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்கள் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிகுந்த உற்சாகத்துடனும், பக்தி பரவசத்துடனும் நடைபெற்றது.