கோவை துடியலூர் அருகே கதிர்நாயக்கன்பாளையம் ஸ்ரீ தேவி நகரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோவிலில் முதலாம் ஆண்டு திருக்குட நீராட்டு விழா மற்றும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
Coimbatore: கோவை துடியலூர் அருகே உள்ள கதிர்நாயக்கன்பாளையம் ஸ்ரீ தேவி நகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோவிலில் முதலாம் ஆண்டு திருக்குட நீராட்டு விழா மற்றும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவின் ஒரு பகுதியாக திருவிளக்கு பூஜை மற்றும் பவளக்கொடி குழுவினரின் வள்ளி கும்மி நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவில் வளாகத்தில் 6 அடி உயர விநாயகர் சிலை வைத்து அப்பகுதி பொதுமக்கள் வழிபாடு நடத்தினர். தொடர்ந்து கணபதி ஹோமம், திருக்குட நீராட்டு, அபிஷேக அலங்கார பூஜைகள் மற்றும் மஹா தீபராதனை ஆகியவை நடைபெற்றன.
50க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜையில் குத்துவிளக்கு, மஞ்சள், குங்குமம், மஞ்சள் சரடு, அரிசி, வளையல், பழங்கள், வெற்றிலை, பாக்கு, உதிரிபூக்கள் வைத்து பூஜைகள் தொடங்கப்பட்டன. 108 அம்மன் போற்றி பாடல்கள் பாடப்பட்டு திருவிளக்கு பூஜை விமரிசையாக நடைபெற்றது. அதன் பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்ற பவளக்கொடி வள்ளி கும்மி நிகழ்ச்சியில் 30க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள் ஒரே மாதிரியான உடை அணிந்து வள்ளி கும்மி ஆடினர். இதனை திரளான பொதுமக்கள் கண்டு களித்தனர்.
இவ்விழாவிற்கு வார்டு கவுன்சிலர் ராஜாமணி தலைமை வகித்தார். சமூக ஆர்வலர் ஸ்ரீதேவி முன்னிலை வகித்தார். மாவட்ட கவுன்சிலர் கார்த்தி, ஒன்றிய கவுன்சிலர் ஆறுச்சாமி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சரவணன், மண்டல தலைவர் புவனேஷ்வரன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களும், ஸ்ரீ தேவி நகர் பொது மக்கள் 500க்கும் மேற்பட்டோரும் கலந்து கொண்டனர்.