கோவை மாவட்டத்தில் வேர்வாடல் நோயால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி உறுதியளித்துள்ளார். சமத்தூர் பேரூராட்சியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
கோவை: கோவை மாவட்டத்தில் வேர்வாடல் நோயால் பாதிக்கப்பட்ட அனைத்து தென்னை விவசாயிகளுக்கும் விரைவில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி உறுதியளித்துள்ளார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சமத்தூர் பேரூராட்சியில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் தோட்டக்கலைத் துறை, வேளாண் துறை, சமூக நலத்துறை, மக்கள் நல்வாழ்வுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
இந்த கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், தோட்டக்கலை, வேளாண்துறை, இலவச வீட்டு மனை பட்டா, கூட்டுறவு கடன் சங்கம், கலைஞர் கனவு இல்லம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் 275 பயனாளிகளுக்கு ரூ.89 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, "கோவை மாவட்டத்தில் வேர் வாடல் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு வெட்டப்பட்ட தென்னை மரங்களுக்கு தமிழக முதல்வர் 18 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி உத்தரவிட்டார். இதில் 13 கோடி ரூபாய் நிதி பெறப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் 5 கோடி ரூபாய் நிதி அரசிடம் கோரப்பட்டுள்ளது. அனைத்து விவசாயிகளுக்கும் விரைவில் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்" என்று உறுதியளித்தார்.