பொள்ளாச்சி அருகே செமனாம்பதி கிராமத்தில் உள்ள மாந்தோப்பில் 4500 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. கேரள கலால் துறையினர் தமிழக போலீசாரின் உதவியுடன் சோதனை நடத்தி எரிசாராயத்தை கண்டுபிடித்தனர்.
Coimbatore: பொள்ளாச்சி அருகே உள்ள செமனாம்பதி கிராமத்தில் மாந்தோப்பில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4500 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள பெரம்பாவூர் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் டோனிக்கு சொந்தமான மாந்தோப்பு, தமிழக-கேரள எல்லைப் பகுதியான செமணாம்பதி கிராமத்தில் உள்ளது. இந்த தோட்டத்தை சபீஸ் என்பவர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்துள்ளார்.
இந்த தோட்டத்தில் எரிசாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கேரள மாநில கலால் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, கேரள மற்றும் தமிழக போலீசாரின் உதவியுடன் கலால் துறை துணை கமிஷனர் ராகேஷ் தலைமையிலான குழு தோட்டத்தில் சோதனை நடத்தியது.
சோதனையின் போது, 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 150 கேன்களில் மொத்தம் 4500 லிட்டர் எரிசாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தோட்ட உரிமையாளர் மருத்துவர் டோனியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட எரிசாராயத்தை கேரள போலீசார் தமிழக எல்லையில் உள்ள ஆனைமலை காவல் நிலைய போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும், சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிய சபீஸ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.