கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய தே.மு.தி.க தலைவர் விஜய பிரபாகரன், அன்னபூர்ணா விவகாரத்தை எதிர்க்கட்சிகள் பெரிதுபடுத்துவதாகவும், அதற்காக நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்கள் தேவையற்றவை எனவும் கூறினார்.
Coimbatore: கோவை பேரூர் பகுதியில் நடைபெற்ற தே.மு.தி.க நிர்வாகி ஒருவரின் திருமண விழாவில் கலந்து கொண்ட தே.மு.தி.மு.க தலைவர் விஜய பிரபாகரன், பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அவர் கூறியதாவது: "தே.மு.தி.க 20-வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களாக கோவை மாவட்டம் முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்தோம். அனைத்து தொகுதிகளிலும் சுமார் 3,000 பேருக்கு அன்னதானம் வழங்கினோம். மேலும் கோவை அரசு மருத்துவமனையில் செப்டம்பர் 14 அன்று பிறந்த 20 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கினோம். அதில் 16 குழந்தைகள் ஆண் குழந்தைகள், கேப்டன் மீண்டும் பிறந்து வந்ததாகவே கருதினேன், மகிழ்ச்சியாக இருந்தது."
"அன்னபூர்ணா விவகாரத்தை எதிர்க்கட்சிகள் பெரிதாக்குகின்றனர். காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர், இதை தேவையற்ற விஷயமாக நான் பார்க்கிறேன். அன்னபூர்ணா சீனிவாசனை மிரட்டி மன்னிப்பு கேட்க வைத்தார்களா என அவர் தான் கூற வேண்டும்."
திருமாவளவனின் சமீபத்திய பதிவு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த விஜய பிரபாகரன், "அந்த பதிவை அவர்தான் போட்டாரா? அல்லது அட்மின் போட்டாரா? என தெரியவில்லை. சில நேரங்களில் அட்மின் பதிவு போட்டதாக கூறி முடித்து விடுவார்கள். அதனால் அதற்கு கருத்து சொல்ல தேவை இல்லை," என்றார்.
மேலும் அவர், "விசிக தலைவர் திருமாவளவன் தொடுவதற்கு முன்னதாகவே தேமுதிக ஏராளமான மதுவிலக்கு போராட்டங்கள், மாநாட்டை நடத்தியுள்ளது. தற்போது அவர்கள் எடுத்துள்ள நடவடிக்கை வரவேற்கத்தக்கது. தேமுதிக சார்பில் நாங்கள் வரவேற்கிறோம்," எனக் கூறினார்.
கோவை நகரின் உள்கட்டமைப்பு குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார். "நீண்ட நாளுக்கு பிறகு கோவை வருகிறேன். இப்போதும் சாலைகள் குண்டும் குழியுமாக தான் உள்ளது. பாலங்கள் கட்டி முடிக்கப்படவில்லை," என்று சுட்டிக்காட்டினார்.
இறுதியாக, தமிழகத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் அவர் பேசினார். "தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை, கள்ளச்சாராயம் என பிரச்சனைகள் உள்ளது. தேவை இல்லாமல் கார் பந்தயம் நடத்தினர். இதெல்லாம் விளம்பரத்திற்கான நடவடிக்கையாக பார்க்கிறேன்," என்று முடித்தார்.