உடுமலை வெஞ்சமடையில் ஸ்ரீ அத்தி மர ஆஞ்சநேயர் மற்றும் ஸ்ரீ நந்தி எம்பெருமானுக்கு அஷ்டபந்தன கும்பாபிஷேகம் நடைபெற்றது. பல்வேறு சடங்குகளுடன் நடைபெற்ற இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை கணக்கம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட வெஞ்சமடை பகுதியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் கோவில் சன்னதியில் உள்ள ஸ்ரீ அத்திமர ஆஞ்சநேயர் மற்றும் ஸ்ரீ வாஞ்சிநாத ஈஸ்வரர் திருக்கோவில் முன்புறம் ஸ்ரீ நந்தி எம்பெருமான் சிலைக்கு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக இன்று காலை 5 மணிக்கு இரண்டாம் கால பூஜை மங்கள இசை, விஸ்வக்சேன ஆராதனம், நாடி சந்தானம், திரவ்யாகுதி, மஹா பூர்ணாகுதி, யாத்ராதானம், தீபாரதணை, கடம் புறப்பாடு நடைபெற்றது. பின்னர் பல்வேறு புண்ணிய தளங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோபுர விமான கலசம் பகுதியில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் தண்ணீர் இளநீர் தயிர், பன்னீர், மஞ்சள், குங்குமம், வெண்ணெய் உட்பட 16 வகை அபிஷேகங்கள் ஆஞ்சநேயருக்கு மேற்கொள்ளப்பட்டு மகா தீபாரதணை நடைபெற்றது. மகாதீபாராதனை முடிந்த உடன் ஆஞ்சநேயர் சன்னதியில் சூரிய ஒளி ஆஞ்சநேயர் பட்டவுடன் பொதுமக்கள் வியப்படைந்து ஆஞ்சநேயரை மனம் உருகி தரிசனம் செய்தனர்.
இதேபோல ஸ்ரீ வாஞ்சிநாத ஈஸ்வரர் திருக்கோவில் முன்புறம் ஸ்ரீ நந்தி எம்பெருமான் சிலைக்கு பால், தண்ணீர், பன்னீர், மஞ்சள், குங்குமம், இளநீர் உட்பட 16 வகையான அபிசேகங்கள் மேற்கொள்ளப்பட்டு நந்தியின் பெருமானுக்கு சிறப்பு வழிபாடு மேற்கொள்ளப்பட்டது.
மேற்கண்ட நிகழ்வுகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர்.
ஸ்ரீ அத்திமர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் ஸ்ரீ நந்தி எம்பெருமான் சிலை பிரதிஷ்டை விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து இருந்தனர்.