திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பொன்னேரியில் நேற்று இரவு நடந்த சாலை விபத்தில் காயமடைந்த வீரக்குமாருக்கு உடுமலை எம்எல்ஏ கே. ராதாகிருஷ்ணன் உதவி செய்தார். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பொன்னேரி பகுதியில் நேற்று இரவு சாலை விபத்து ஒன்று நடந்தது. இந்த விபத்தில் குடிமங்கலம் பகுதியைச் சேர்ந்த வீரக்குமார் என்பவர் படுகாயமடைந்தார்.
இந்நிலையில், திருப்பூரில் இருந்து உடுமலை நோக்கி வந்து கொண்டிருந்த உடுமலை சட்டமன்ற உறுப்பினர் கே. ராதாகிருஷ்ணன், விபத்து நடந்த இடத்தில் தனது வாகனத்தை நிறுத்தினார். உடனடியாக காரிலிருந்து இறங்கிய அவர், அவசர ஊர்திக்கு தகவல் தெரிவித்தார்.
பின்னர், காயமடைந்த வீரக்குமாரை உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும், மருத்துவமனையின் தலைமை மருத்துவரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, காயமடைந்தவருக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இந்த சம்பவத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.