உடுமலையில் பெரியார் 146வது பிறந்தநாளை முன்னிட்டு வைக்கப்பட்ட பேனரில் நிர்மலா சீதாராமன் படம் இடம்பெற்றதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. முற்போக்கு வழக்கறிஞர் கூட்டமைப்பு இந்த பேனரை வைத்துள்ளது.
Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட கச்சேரி வீதி, பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தந்தை பெரியாரின் 146வது பிறந்த நாளை முன்னிட்டு முற்போக்கு வழக்கறிஞர் கூட்டமைப்பு சார்பில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.
இந்த பேனர்களில் தமிழகத்தில் சில தினங்களுக்கு முன் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அன்னபூரணா ஹோட்டல் உரிமையாளர் மன்னிப்பு கேட்ட புகைப்படம் வைக்கப்பட்டுள்ளதால் சர்ச்சை மற்றும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து முற்போக்கு வழக்கறிஞர் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சாதிக் பாஷா கூறுகையில், "மனித குலத்திற்கு எதிரான சாதி மத அதிகார ஆணவங்களின் வேர் அறுக்க உறுதிமொழி ஏற்போம் என்ற பெரியாரின் 146ஆவது பிறந்தநாளில் அனைவரும் உறுதிமொழி ஏற்போம். சமீபத்தில் ஜிஎஸ்டி கருத்து கேட்பு கூட்டத்தில் கருத்து தெரிவித்த அன்னபூர்ணா ஹோட்டல் அதிபர் சீனிவாசன் அவர்களை அவமதிக்கும் விதமாக சாதிய வன்முறையுடன் செயல்பட்ட மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களின் புகைப்படத்தை தொடர்புபடுத்தி பிறந்தநாள் பரப்புரை செய்தி வெளியிட்டுள்ளோம்," என்று தெரிவித்தார்.
உடுமலை பகுதியில் தந்தை பெரியாரின் 146ஆவது பிறந்தநாளில் வைக்கப்பட்ட பிளக்ஸ் பேனரில் நிர்மலா சீதாராமன் இருக்கும் படம் தற்போது உடுமலை பகுதியில் பேசும் பொருளாக மாறியுள்ளது.