உடுமலையில் மிலாடி நபி விடுமுறையை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால், கள்ளச்சந்தையில் இருமடங்கு விலைக்கு மதுபானம் விற்கப்பட்டது. இதனால் பேருந்து நிலையம் அருகே பெரும் கூட்டம் குவிந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Coimbatore: திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில் மிலாடி நபி அரசு விடுமுறையை முன்னிட்டு டாஸ்மாக் அரசு மதுபானக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இதனை வாய்ப்பாகப் பயன்படுத்தி உடுமலை மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அரசு மதுபானக் கடை எண் 2009-ல் உள்ள பாரில் அரசு மதுபானங்கள் இருமடங்கு விலைக்கு விற்கப்பட்டது.
மதுபானக் கடைகளுக்கு விடுப்பு விடப்பட்டதால் மதுபானம் தேடி அலைந்த மதுப்பிரியர்கள், மதுபானம் கள்ளச்சந்தையில் விற்கப்படுவது தெரிந்து திருவிழா கூட்டம் போல் கூடினர்.
மத்திய பேருந்து நிலையம் அருகில் இருந்ததாலும், ஒரே இடத்தில் ஏராளமான குடிமகன்கள் கூடியதாலும் வாகன நெரிசல் ஏற்பட்டது. அரசு மதுபானக் கடை திறந்திருந்தால் கூட இவ்வளவு நெரிசலைக் கண்டதில்லை என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.
கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெறுவதால் குடிமகன்களின் தொல்லைகளே அதிகரிக்கிறது என்று மது விற்பனை குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தும் காவல்துறை கண்டுகொள்ளவில்லை என பொதுமக்களும் அப்பகுதி வியாபாரிகளும் புலம்பினர்.