கோவை உருமாண்டம்பாளையம் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் புரட்டாசி ஒன்று மற்றும் பெளர்ணமியை முன்னிட்டு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன. 7 தாசர்களுக்கு படையல் போடப்பட்டு, ரங்க ராமருக்கு சங்கு சேகண்டி ஊதப்பட்டது.
கோவை: கோவை உருமாண்டம்பாளையம் ஸ்ரீ அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் கோவிலில் புரட்டாசி ஒன்று மற்றும் பெளர்ணமியை முன்னிட்டு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன. இந்த நிகழ்வில் பண்ணாரி மாரியம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் செய்யப்பட்டதுடன், ரங்க ராமர் கடவுளுக்கு சங்கு சேகண்டி ஊதி தாசர்களுக்கு படையல் போடப்பட்டது.
புரட்டாசி மாதம் தமிழ் 1ம் தேதியை ஒட்டி அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் கோயில் பெளர்ணமி குழு சார்பில் மாலை 4 மணிக்கு அபிஷேக பூஜையும் 6 மணிக்கு சுத்து பூஜை மற்றும் அலங்கார பூஜையும் நடைபெற்றது.
புரட்டாசி மாதம் தொடங்கியதை முன்னிட்டு 7 தாசர்களை வரவழைத்து அவர்களுக்கு தலைவாழையிட்டு அதில் தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு, காணிக்கை, உப்பு, புளி, மிளகாய், அரிசி, பருப்பு, பச்சபயிர், பாவக்காய், வெண்டைக்காய், கத்திரிக்காய், பூசணிக்காய், அவரைக்காய், கொத்தவரங்காய், அரசாணிக்காய், சேனைக்கிழக்கு உள்ளிட்டவைகளை படையல்களாக வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
இந்த நிகழ்வில் 7 தாசர்கள் ரங்கராமரை வேண்டி சங்கு ஊதி பாடல்கள் பாடினர்.
அதன்பின்னர் பக்தர்கள் அனைவரும், 7 தாசர்கள் முன்பு வைத்த படையலை தொட்டு வணங்கி அரிசியை மடிப்பிச்சையாக வாங்கிச் சென்றனர். அந்த அரிசியினை வீட்டில் உள்ள அரிசியுடன் சேர்த்து சமைத்து வந்தால் வேண்டியது நிறைவேறும் என்பது ஐதீகம்.
நிகழ்வின் தொடக்கத்தில் மாப்பிள்ளை விநாயகர், பண்ணாரி மாரியம்மன், தலவிருட்சம் உள்ளிட்டவைகளுக்கு சுற்று பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் நிலா தெரியும்படி கண்ணாடி வைத்து பூஜைகள் செய்யப்பட்டு, கண்ணாடியில் பக்தர்கள் பெளர்ணமி நிலாவை பார்த்து சாமி தரிசனம் செய்தனர்.
நிகழ்வின் இறுதியில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை அருள்மிகு பண்ணாரி மாரியம்மன் கோயில் பெளர்ணமி குழு நிர்வாக பொருப்பாளர் தேவேந்திரன், குழுவை சேர்ந்த சின்னுராமகிருஷ்ணன், ஜெய்பிரகாஷ், விஜயகுமார், பொன்னுசாமி, பானு நாகராஜ் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.